சர்கார் கதை பிரச்சனை: வருண் ராஜேந்திரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய முருகதாஸ்
சென்னை: கதை பிரச்சனை தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னை போன்றே கதையின் கருவை யோசித்த வருணை பாராட்டி சர்கார் படத்தில் கடிதம் ஒன்றை 30 வினாடிகள் காண்பிக்க ஒப்புக் கொண்டார் முருகதாஸ்.

அதன் படி சர்கார் படத்தின் இன்ட்ரோவில் வருணின் பெயர் காண்பிக்கப்பட்டது. வருணின் பெயர் அடங்கிய அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,


தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான ஓட்டை, கள்ள ஓட்டாக அடுத்தவன் போடுவது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து, தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி சர்கார் என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன். இதே கற்பனைக் 'கரு' ஒரு உதவி இயக்குனர் திரு. வருண்(எ) கே.வி. இராஜேந்திரனுக்கும் உதித்து, எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதே 'கரு'வை அவரும் சிந்தித்து, எனக்கு முன்பே பதிவு செய்திருந்தபடியால், வளர்ந்து வரும் உதவி இயக்குனர் திரு. வருண்(எ) கே.வி. இராஜேந்திரனை பாராட்டி, அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில் இதை பதிவு செய்து ஊக்குவிக்கிறேன். திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ் என்று போடப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











