பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிர்பிரிந்தது.. பாலிவுட் அதிர்ச்சி!
மும்பை: பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.
இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடன இயக்குநர் சரோஜ்கான். இவருக்கு கடந்த 17 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மும்பை பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பரிசோதனை
இந்தச் செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சரோஜ் கானுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு அந்த தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவர் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று அவர் மகனும் நடன இயக்குநருமான ராஜு கான் தெரிவித்திருந்தார்.

பாலிவுட் சோகம்
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக, இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து பாலிவுட் சோகத்தில் மூழ்கியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக முக்கியமான பிரபலங்கள் தொடர்ந்து மறைந்து வருகின்றனர். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் தாய் வீடு
மறைந்த சரோஜ்கான், பாலிவுட்டில் மாஸ்டர் ஜி என்று அழைக்கப்பட்டு வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடன திறமையால் கலக்கி வந்தவர். கடந்த ஆண்டு வெளியான கலங்க் மற்றும் கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகா படம் வரை பல பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். தமிழில், ரஜினியின் தாய் வீடு, மணிரத்னத்தின் இருவர், சிருங்காரம் உள்ளிட்ட படங்களுக்கும் இவர் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

குழந்தை நட்சத்திரம்
இவர் சுமார் இரண்டாயிரம் பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். மூன்று முறை சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். கடைசியாக 2019ல் வெளியான 'தபா ஹோகயே' எனும் இந்திப் படத்துக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருந்தார்.
இவர் தனது மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, குரூப் டான்சர் ஆனார். பிறகு நடன இயக்குனராக மாறினார்.


Click it and Unblock the Notifications











