மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி... இயக்குநராக ரிட்டர்ன் ஆகும் சசிகுமார்... அப்போ அந்த மூவி?
சென்னை: சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமாருக்கு இந்தப் படம் கம்பேக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து சசிகுமார் தனது அடுத்தப் படத்தில் பிஸியாகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகுமார் இயக்கத்தில் ஜெய்: 2008ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன் அவரும் இணைந்து நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. 1980களின் பின்னணியில் பீரியட் ஜானரில் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கியிருந்தார் சசிகுமார்.
அதனைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கிய ஈசன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் மீண்டும் இயக்குநராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகுமார், நடிப்பில் பிஸியாகிவிட்டார். 2010க்குப் பிறகு 13 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த சசிகுமார், தற்போது மீண்டும் அதற்கு ரெடியாகிவிட்டாராம். மேலும், இந்த முறையும் நடிகர் ஜெய்யுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சசிகுமார் நடிப்பில் 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் கடைசியாக வெளியான அயோத்தி மட்டுமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. மேலும், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடமும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் உற்சாகமான சசிகுமார், அடுத்து படம் இயக்க ரெடியாகிவிட்டார்.

ஏற்கனவே சர்ச்சைக்குரிய குற்றப் பரம்பரை படத்தை சசிகுமார் இயக்குவதாக சொல்லப்பட்டது. இதில் விஜயகாந்தின் மகன் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. சசிகுமாரும் விரைவில் படம் இயக்குவேன் எனக் கூறிக்கொண்டே இருந்தார். அதனால் சசிகுமார் இயக்கத்தில் குற்றப் பரம்பரை படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக வேறொரு படத்தை இயக்கவுள்ளாராம் சசிகுமார்.
சசிகுமார் இயக்கத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்தப் படம் சுப்ரமணியபுரம் போன்று ஆக்ஷன் ஜனரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது சுப்ரமணியபுரம் படத்தின் சீக்வெல்லாக இருக்குமா என்றும் எதிர்பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் சசிகுமார் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











