சசிகுமார் அவ்வளவுதான் என்று சொன்னார்கள்.. உச்சக்கட்டமாக புகழும் இரா.சரவணன்
சென்னை: இயக்குநரும், நடிகருமான சசிகுமார் கடந்த வருடத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சிம்ரன், யோகிபாபு உள்ளிட்டோர் எல்லாம் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இவ்வளவு வசூலை அள்ளியது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. இந்நிலையில் சசிகுமார் குறித்து இயக்குநர் இரா.சரவணன் நெகிழ்ச்சியோடு புகழ்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பேசுகையில், "சசிகுமார் அவ்வளவுதான்" எனப் பலரும் முடிவு கட்டிவிட்ட நேரத்தில், பீனிக்ஸ் பறவையைப்போல் அவரை எழ வைத்த படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. படம் ரிலீஸாகி இன்றோடு ஒரு வருடம்... கதை கேட்டது தொடங்கி திரையில் பார்த்தது வரையிலான சம்பவங்களை நினைக்கிற போதே கண்ணைக் கட்டுகிறது. படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் சசி சார் போன் பண்ணினார். "நல்லா ஷூட் பண்றாங்க. படம் அருமையா வந்துட்டு இருக்கு. ஆனா, பட்ஜெட் மட்டும் ஜாஸ்தியாகும் போல... யுவராஜ்கிட்ட பேசி கொஞ்சம் சிக்கனமா பண்ணச் சொல்லுங்க.

சங்கடப்படக்கூடாது: நம்மளை நம்பி முதல் போடுறாங்க. நாளைக்கு அவங்க சங்கடப்பட்டு நின்னுடக் கூடாது" என்றார் சசிகுமார் சார். தம்பி யுவராஜுக்கு போன் பண்ணி பல விஷயங்களைப் பேசிவிட்டு இறுதியாக, "படத்தைக் கொஞ்சம் சிக்கனமா பண்ணுங்க தம்பி..." என்றேன். எதிர்முனையில் பதில் இல்லை. "இப்பெல்லாம் சசி சாருக்கு பெரிய பிசினஸ் இல்லப்பா.. அகலக்கால் வைக்காதீங்க" என்றேன் வெளிப்படையாய். "சார், தயவுபண்ணி சசி சாரை குறைச்சு மதிப்பிடாதீங்க. அவர் 100 கோடி பிசினஸ்க்கு வொர்த்தான ஹீரோ. இந்தப் படம் நிச்சயம் ஒரு மேஜிக் பண்ணும். நீங்க பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்காதீங்க சார்" என்றார் யுவராஜ். அவர் சொன்னது போலவே 100 கோடிக்கான வசூல் பட்டியலில் இணைந்து வாகை சூடியது 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம்.
அவ்வளவுதான் என்று சொன்னார்கள்: "சசி சார் அவ்வளவுதான்" எனச் சொன்னவர்களே அவருடைய தேதிக்காக இன்றைக்கு க்யூவில் நிற்கிறார்கள். பந்தயக் குதிரையாக மறுபடியும் பாய்ச்சல் காட்டத் தொடங்கிவிட்டார் சசி சார். சசி சாரின் வெற்றி பலருக்குமான நம்பிக்கை. அவர் பார்க்காத வெற்றி இல்லை; அவர் அடையாத சறுக்கல் இல்லை. ஆனாலும், ஒருபோதும் அவர் தளர்ந்து பார்த்ததில்லை. நெருக்கடிகள் முற்றி அவர் உடைந்துவிடுவாரோ என நாங்கள் பயந்த நேரத்தில், தேடிவந்து வாய்த்த படம்தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'!
நல்ல கதைகளுக்கு ஹீரோக்கள் தவியாய்த் தவிக்கையில், தேடி அலைகையில் மடியில் வந்து விழுந்த வாய்ப்பாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' சசி சாரை தேடி வந்தது. அவருடைய நல்ல மனம் அவருக்கு உருவாக்கித் தந்த வாய்ப்பு இது! படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அத்தனை பேரும் கோடி நன்றிக்குரியவர்கள். "இங்கே யாரும் அகதி இல்லை" என ஓங்கி உரைத்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' நிச்சயம் காலம் கடந்தும் பேர் சொல்லும் காவியமாக நிலைத்திருக்கும்!" என்றார்.


Click it and Unblock the Notifications