சதுரங்க வேட்டை 2 கதை திருடப்பட்டதா?... தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையை திருடி தெலுங்கில் கிலாடி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் கங்காதரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதுரங்க வேட்டை 2 படம்
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்தில் நாயகனாக நட்ராஜ் நடித்திருந்தார். அந்தப் படம் சிறப்பான வெற்றியை பதிவு செய்த நிலையில், அடுத்ததாக நடிகர் அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி போயுள்ளது.

மக்கள் ஏமாற்றம் கதைக்களம்
முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் மக்கள் ஏமாற்றப்படுவதையே மையமாக வைத்து நிர்மல் குமார் என்பவர் இயக்கியுள்ளார். படத்தை மனோபாலா தயாரித்துள்ளார். முதல் பாகத்தையும் இவரே தயாரித்திருந்தார். படத்தில் மேலும் நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கங்காதரன் வழக்கு
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எச் வினோத் எழுதியுள்ளார். அஸ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை திருடி தெலுங்கில் கிலாடி படத்தை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர் கங்காதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

கதைத்திருட்டு என புகார்
சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையை திருடி தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான கிலாடி படத்தை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை ஐதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் வர்மாவிற்கு 40 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்
இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக சதுரங்க வேட்டை படத்தின் கதையை திருடி ரவி தேஜாவின் கிலாடி படத்தை கிரண் ஸ்டூடியோ நிறுவனம் எடுத்துள்ளதாகவும் உடனடியாக படத்தை ஓடிடி உள்ளிட்ட தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து படத்தை வெளியிடவும் தடைவிதிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் வழக்கு குறித்து ஒரு வாரத்தில் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில் தற்போது கதைத் திருட்டும் இதில் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











