தனி கட்சியா? பாஜகவில் சேரப் போகிறேனா? சத்யராஜ் மகள் கொடுத்த விளக்கத்தை கேளுங்க!
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பாஜகவில் இணையப்போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள திவ்யா, மதத்தைப் போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வலம் வந்த நடிகர் சத்யராஜ் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் கட்டப்பாவாகவும் தீபிகா படுகோன், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு திவ்யா சத்யராஜ் என்கிற மகளும், சிபிராஜ் என்கிற மகனும் உள்ளனர். சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜின் மகள் நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார்.

சத்யராஜ் மகள்: அண்மையில் இவர் அளித்த பேட்டியில், அரசியலில் தனது ஈடுபாடு இருப்பதாகவும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் திவ்யா கூறியிருந்தார். இதையடுத்து, திவ்யா சத்யராஜ், பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
களப்பணிதான் விருப்பம்: அதில் 'எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என ஏற்கெனவே தெரியப்படுத்தினேன். உடனே எல்லோரும், எம்.பி ஆக அரசியலுக்கு வருகிறீர்களா? மந்திரி ஆசை உண்டா? சத்யராஜ் சார் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா?’ எனப் பல கேள்விகள் வந்தன. நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், களப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வர நினைக்கிறேன். களப்பணிகள் செய்தும் வருகிறேன்.

பிஜேபியில் இணைய விரும்பவில்லை: மகிழ்மதி என்ற இயக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறேன். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. மேலும், பிஜேபியில் இணைய விருப்பம் இல்லை எனக் கூறியுள்ள அவர் தேர்தல் முடிந்ததும் எந்தக் கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன் என திவ்யா சத்யராஜ் அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











