வேதம் புதிது படத்துக்கு வந்த சிக்கல்.. எம்ஜிஆர் பார்த்த வேலை.. வெளிப்படையாக பேசிய சத்யராஜ்!
சென்னை: சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தோழர் சேகுவேரா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், படத்தில் நடித்துள்ள கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூல் சுரேஷ் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு டி. ராஜேந்தர் போல பஞ்ச் வசனங்களுடன் பேசி அரங்கை அதிர வைத்தார். அவரை தொடர்ந்து இறுதியாக சத்யராஜ் பேசும் போது, கூல் சுரேஷ் பெயரை இனிமேல் தூள் சுரேஷ் என்றே மாற்றி விடலாம். அந்தளவுக்கு பேசுகிறார் என்று பாராட்டினார்.

அதன் பின்னர், தணிக்கை குழு உத்தரவிட்ட நிலையில், படத்தின் சில வசனங்கள் மாற்றியமைக்கப்பட்டு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டதாகவும் இந்த படத்தின் வெளியீட்டில் எந்த சிக்கலும் இருக்காது என பேசிய சத்யராஜ், தான் நடித்த வேதம் புதிது படம் சந்தித்த சென்சார் பிரச்சனை குறித்தும் பேசியிருந்தார்.
பெருமையான கதாபாத்திரம்: 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இதில், எனக்கு ரொம்பவே பிடித்தமான என்னை பெருமைப்படுத்திய கதாபாத்திரம் என்றால் அது தந்தை பெரியாராக நான் நடித்த கதாபாத்திரம் தான். அதன் பின்னர், சில தலைவர்களின் பெயர்களில் நடிப்பது என்னை ரொம்பவே பெருமைப்படுத்துகிறது. ஏற்கனவே புரட்சிக்காரன் படத்தில் சேகுவேரா போல வேடமிட்டு நடித்தேன். இந்த முறை சேகுவேரா படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.

தணிக்கை பிரச்சனை தீர்ந்தது: விநியோகஸ்தர்கள் இந்த படம் குறித்து எந்தவொரு பயமும் கொள்ள வேண்டாம். ஏற்கனவே படத்தில் இருந்து சில வசனங்களை மட்டுமே தணிக்கை குழு மாற்ற சொன்னது. அதை மாற்றி சான்றிதழ் பெற்று விட்டோம். அதனால், படம் திட்டமிட்டபடி வெளியாகும். அதில், எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். சில வசனங்கள் மாற்றப்பட்டாலும், படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது புரிந்து விடும். உதய சூரியனின் பார்வையிலே என எம்ஜிஆர் பாடியதை புதிய சூரியனின் பார்வையிலே என மாற்ற சொன்னார்கள். ஆனால், ரசிகர்கள் அதை உதய சூரியனின் பார்வையிலே என்று தான் இன்றளவும் எடுத்துக் கொள்கின்றனர் என்றார்.
எம்ஜிஆர் பார்த்த வேலை: பராசக்தி, வேலைக்காரி என அப்போதிலிருந்தே தணிக்கை பிரச்சனை படங்களுக்கு வரத்தான் செய்யும். நான் நடித்த வேதம் புதிது படம் ரிலீஸ் ஆகுமா என்றே தெரியாத நிலை இருந்தது. அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. அப்போது தலைவர் எம்ஜிஆர் தான் படத்தை பார்த்து விட்டு, இந்த படத்தை ரிலிஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்க, எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்றார். அப்படி ரிலீஸ் ஆன படம் தான் வேதம் புதிது. இதுபோல பல படங்கள் சிக்கலை சந்தித்த அனுபவங்கள் நிறையவே பார்த்து விட்டேன். இந்த படமும் தடைகளை தாண்டி வெளியாகி தோழர்களை சென்று சேரும் என சத்யராஜ் பேசியுள்ளார்.
தோழர் சேகுவேரா: இயக்குநர் அலெக்ஸ் ஏ.டி இயக்கத்தில் சத்யராஜ், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்த படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











