பேச பேச அழுத சத்யராஜ்.. கொளத்தூரில் ஸ்டாலின் வென்றிருக்கனும்.. எமோஷனல் பேச்சு
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியைச் சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக திமுகவின் முக்கிய கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்ட இந்த முடிவு அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின், தனது தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார். வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மக்கள் தீர்ப்பை மதிப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில், நடிகரும் திராவிட இயக்க ஆதரவாளருமான சத்யராஜ், பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் திமுக சார்பில் கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மு.க. ஸ்டாலினின் தோல்வி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அழுத சத்யராஜ்: அப்போது பேசிய சத்யராஜ், "கொளத்தூரில் இந்த நிகழ்ச்சி நடப்பதால் இதைக் கேட்கிறேன், நீங்கள் செய்தது நியாயமா? கொளத்தூரில் தலைவர் வென்றிருக்க வேண்டும். அவர் தோற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அண்ணா, கலைஞருக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவர். அவரைத் தோற்கடித்துவிட்டீர்கள். இனி பட்டுத் திருந்துங்கள். பட்டு அனுபவியுங்கள். அப்போதுதான் புத்தி வரும்" என்று கூறினார்.
வருத்தம்: தொடர்ந்து பேசிய அவர், "நான் பொதுவாக எல்லா விஷயங்களையும் நகைச்சுவையாகவும், விளையாட்டாகவும் அணுகும் மனிதன். எந்த விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் தலைவரின் இந்த தோல்வியை மட்டும் என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றும் தெரிவித்தார். இவ்வாறு பேச பேச சத்யராஜ் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
திமுகவினர் மத்தியில்: சத்யராஜின் இந்த பேச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே வருத்ததை உருவாக்கியது. அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்திருந்தாலும், மு.க. ஸ்டாலினின் தோல்வி குறித்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், சத்யராஜின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications