இளையராஜா என்ன சாதித்து விட்டார்.. சரமாரி அட்டாக்குடன் ட்ரெண்டாகும் பிரபலத்தின் பேட்டி
சென்னை: இந்திய அளவில் புகழ் பெற்றவர் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை வரலாறு மெர்குரி நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். கண்டிப்பாக இந்தப் படம் பெரும் அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இளையராஜா பற்றி சவுக்கு சங்கர் பேசிய பழைய பேட்டி சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
இளையராஜாவின் இசை இல்லாமல் தமிழர்களுக்கு ஒரு நாள் செல்லாது. ஒவ்வொரு நாளும் இளையராஜா தமிழர்களின் காதுகளில் இசை கச்சேரி நடத்திக்கொண்டிருப்பவர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இசையமைத்திருக்கிறார். பல தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றிய பேரனுபவம் கொண்ட இளையராஜா தற்காலத்திற்கேற்பவும் சிறந்த இசையை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

இளையராஜா பயோபிக்: சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி AI தொழில்நுட்பத்திலும் ரசிகர்கள் இளையராஜா படத்துக்காக பல்வேறு புகைப்படங்களை உருவாக்கிவருகிறார்கள்.
சவுக்கு சங்கர் பேட்டி: இந்நிலையில் சவுக்கு சங்கர் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "இளையராஜா ஒரு அற்பமான மனிதர். எஸ்பிபி வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டன. அப்போது தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னவர்தான் இளையராஜா. அது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா. தமிழ் சமூகத்துக்கு இவர் அப்படி என்ன செய்துவிட்டார். பணம் வாங்கிக்கொண்டு நல்ல இசையை கொடுத்திருக்கிறார். தேவாகூடத்தான் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்.
இளையராஜா என்ன கடவுளா?: பாடல்கள் எல்லாம் ஹிட்டானால் இளையராஜாவை கடவுளாக பார்க்க வேண்டுமா. ஏ.ஆர்.ரஹ்மான் வரும்வரை பின்னணி இசை கலைஞர்கள் யாருமே அங்கீகரிக்கப்படவில்லை. இளையராஜா இருந்தவரை எத்தனை பாடகர்கள் இருந்தார்கள் யோசித்து பாருங்கள். ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா, எஸ்பிபி, மனோ இவர்களைத் தவிர்த்து வேறு யாராவது பெரிய பாடகர்களாக இருந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
ஏ.ஆர்.ரஹ்மான்: ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது ஆல்பத்தில் எல்லோருடைய பெயர்களும் இருக்கும். இளையராஜா அதை செய்தாரா. இந்த சமூகத்தில் இளையராஜா என்ன செய்து கிழித்துவிட்டார். அவர் பணம் வாங்கிக்கொண்டு இசையமைக்கிறார் அவ்வளவுதான். அவர் ஒரு சுயநலவாதி.
ரஹ்மானுக்கு சிக்கலை ஏற்படுத்தினார்: ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் வெளிநாட்டிலிருந்து ஒரு இசைக்கருவியை இங்கே கொண்டு வந்தார். இப்போது கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை. ஆனால் அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் கடுமையாகவே இருந்தன. அந்தச் சமயத்தில் இளையராஜா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த இசைக்கருவியை கிட்டத்தட்ட ஒரு வருடம் விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு வராதபடி பார்த்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











