மாப்பிள்ளை பட வழக்கு: சக்சேனாவுக்கு ஜாமீன்!

சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜபக். இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். தனுஷ், ஹன்சிகா ஆகியோர் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தை அவர் தயாரித்தார்.
இந்த நிலையில் கோடம்பாக்கம் போலீசில் நேமிசந்த் புகார் கொடுத்தார். அதில், பட விநியோகம் தொடர்பாக தன்னிடம் இருந்து சக்சேனா 3 கோடியே 37 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் சக்சேனாவை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி பி.தேவதாஸ் தள்ளுபடி செய்தார்.
அதைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ராஜசூர்யா விசாரித்தார். சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து அவர் நீதிபதி உத்தரவிட்டார்.
சக்சேனா மீதான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அடுத்த இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரு வழக்குகளில் புகார்தாரர் மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். இப்போது ஏழாவது வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. ரஞ்சிதா - நித்யானந்தா வழக்கில் இப்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











