'ஏ' படம் பார்க்க ஆதார் அட்டையில் வயதை மாற்றிய பள்ளி மாணவர்கள்
ஜெய்பூர்: கபிர் சிங் படத்தை பார்க்க பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டையில் வயதை மாற்றி ஏமாற்றிய சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் கடந்த 21ம் தேதி வெளியானது. அந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்று வழங்கியது. அதனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் கபிர் சிங் படத்தை பார்க்க முடியாது.

இந்நிலையில் கபிர் சிங் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்துவிடும் ஆவல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆதார் அட்டையை செல்போனில் புகைப்படம் எடுத்து ஒரு குறிப்பிட்ட ஆப் மூலம் பிறந்ததேதியை மாற்றி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்று காண்பித்து படம் பார்த்துள்ளனர்.
இது குறித்து படம் பார்த்த சிறுவன் ராஜேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது,
நானும், என் நண்பர்களும் எங்களின் ஆதார் அட்டைகளை புகைப்படம் எடுத்து மொபைல் ஆப் மூலம் அதில் எங்களின் பிறந்த தேதியை மாற்றினோம். தியேட்டர் வாசலில் யாரும் எங்களை தடுத்து நிறுத்தவில்லை. நாங்கள் படம் பார்த்தோம் என்றார்.
மற்றொரு மாணவரான பிரபு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது,
நாங்கள் புக்மைஷோ மூலம் நிறைய டிக்கெட்டுகளை புக் செய்தோம். யாரும் எங்களின் வயது குறித்து கேட்கவில்லை. தியேட்டர் வாசலில் காவலாளிகள் நிறுத்தினார்கள். ஆனால் அவர்களை எப்படி சமாளிப்பது என்று பள்ளி நண்பர்கள் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருந்தனர். அதனால் ஆதார் அட்டையை புகைப்படம் எடுத்து வயதை மாற்றி அடல்டாகிவிட்டோம் என்றார்.
ஐநாக்ஸ் லீசர் லிமிடெட்டின் உயர் அதிகாரி ராஜீவ் பட்னி கூறியதாவது,
கபிர் சிங் படத்தை பார்க்க நிறைய பதின் வயதினர் வருகிறார்கள். ஆனால் அவர்களை வாசலில் தடுத்து நிறுத்தி அனுப்பிவிடுகிறார்கள் எங்கள் ஊழியர்கள்.
ஏ படத்திற்கு நிறைய விதிமுறைகள் வைத்துள்ளோம். யாராவது அந்த படம் குறித்து பாக்ஸ் ஆபீஸில் விசாரித்தால் முதலில் வயது வரம்பு குறித்து தான் தெரிவிக்கப்படுகிறது. மேலும் டிக்கெட்டில் சிவப்பு நிறத்தில் ஏ என்று குறிப்பிடுகிறோம். பெற்றோருடன் வரும் பதின் வயதினரும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











