Screen Doctor: கூலி மெகா பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும்.. லோகேஷ் கனகராஜ் இதெல்லாம் செஞ்சிருந்தா?
சென்னை: சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டை கொடுத்து ஒரு பான் இந்திய வெற்றியை லோகேஷ் கனகராஜிடம் கேட்ட நிலையில், அவர் தனது கதையை வைத்து ஒரு சுமாரான படமாகவே கூலி படத்தை கொடுத்துள்ளார். ஆனால், அந்த படத்தில் நடித்த முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், நாகார்ஜுனா, செளபின் சாஹீர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நித்யா ராம், கேமியோக்களான பூஜா ஹெக்டே மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்களின் நடிப்பு மூலமாக கூலி படம் அதிக வசூல் வேட்டையை நடத்தியுள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
லியோ படத்தை பார்த்த ரசிகர்கள் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் இடம்பெற்ற அந்த பலி கொடுக்கும் காட்சிகளுக்கு மட்டுமே எதிராக கருத்து தெரிவித்தனர். அதற்கு அந்த ஃபிளாஷ்பேக்கே ஒரு ஃபேக்காக இருந்திருக்கலாம் என சமாளித்த லோகேஷ் கனகராஜ், தற்போது கூலி படத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு எல்லாம் எடுக்கவில்லை என பேசியிருப்பது பெரும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

கூலி படம் எப்படி இருந்தால் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் கடுமையான 2 வருட உழைப்பையும் கொண்டாடியிருப்பார்கள் என்பது குறித்த அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஓபனிங்கே சூப்பர் ஸ்டார் இன்ட்ரோ: புஷ்பா 2 படத்தில் பகத் ஃபாசில் கதாபாத்திரம் மாறுவேடம் அணிந்துக் கொண்டு புஷ்பா ஆட்களை அரெஸ்ட் பண்ணி வைத்த பின்னர், அல்லு அர்ஜுன் வருவது தான் சரியான ஓபனிங். ஆனால், தியேட்டருக்கும் வரும் அல்லு அர்ஜுன் ரசிகர்களை கவர்வதற்காக ஓபனிங்கிலேயே அல்லு அர்ஜுனை சுகுமார் காட்டி வியாபாரம் பார்த்திருபார். அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஓபனிங் காட்சியுடன் கூலி படத்தை தொடங்கியிருந்தாலே படம் இன்னும் தாறுமாறாக இருந்திருக்கும்.
எலக்ட்ரிக் நாற்காலி போர்ஷன் ஸ்ட்ராங்கா இருந்திருக்கணும்: நாயகன் படத்திலேயே கடலில் போதைப் பொருட்களை கட்டிப் போட்டு கடற்படையினர் சோதனை நடத்தும் போது தப்பிக்கும் காட்சிகளை 35 ஆண்டுகளுக்கு முன்பே படமாக்கியிருப்பார்கள். இந்த கூலி படத்தில் வித்தியாசமான விஷயமாக எலக்ட்ரிக் சேர் மூலமாக உடல்களை எரிக்கும் விஷயத்தை கையில் எடுத்து அதுதான் படத்திற்கான மூலக்கதை என்று நம்பிய நிலையில், அது இல்லாமல், சைமன் ஆட்கள் தவிக்கும் விஷயத்தையும் அந்த நாற்காலியை சத்யராஜ் அல்லது அவரது மகள் ஸ்ருதிஹாசன் மட்டுமே இயக்கும் நேர்த்தியை கடைசி வரை வைத்து ரச்சிதா ராம் கையில் அதை கொடுக்காமல் இருந்திருந்தாலே அந்த நாற்காலி காட்சிகள் தப்பித்து ஒரு பயத்தை கிளப்பியிருக்கும். அல்லது ரச்சிதா ராம் அவர்கள் அருகே இருந்துக் கொண்டு அதை கற்றுக்கொண்டார் என்பதையாவது காட்டியிருந்தால் அந்த காட்சியும் செம மாஸாக இருந்ததுடன் மட்டுமின்றி நம்பகத்தன்மையை பெற்றிருக்கும்.

உபேந்திரா என்ட்ரி: அந்த தேவா மேன்சனில் சூப்பர் ஸ்டார் சண்டை போடாமல் அந்த 2 பெண்களையும் உபேந்திராவே காப்பாற்றியிருந்தால், ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சீனில் கிடைத்த கூஸ்பம்ப்ஸ் மற்றும் லியோவில் அந்த ஹைனா சீன் கொடுத்த கூஸ்பம்ப்ஸ் காட்சியை மீண்டும் ரீ க்ரியேட் செய்திருக்கும். ரஜினி முதுகில் கோடரி சொருகிய பிறகு கூட வராத கலீஷா விசில் அடித்த பின்னர் வருவதெல்லாம் வீக்கான ரைட்டிங்காகவே பார்க்கப்படுகிறது. இந்தளவுக்கு கூட ஆடியன்ஸ் எதிர்பார்க்கக் கூடாது என்றால் அது ரொம்ப தவறு.
அமீர்கானை வைத்து அடுத்த பார்ட் லீடு: ரோலக்ஸ் போல அமீர்கான் கிளைமேக்ஸில் வரும் காட்சிகளை வைத்து அடுத்த பார்ட்டுக்கு ஃபயர் ஆன லீடு கொடுத்திருக்கலாம். ஆனால், டீஏஜிங் பில்டப் மட்டுமே அங்கே போதும் என நிறுத்திக் கொண்டது ஸ்பீடு பிரேக்கராக மாறிவிட்டது. பாக்ஸ் ஆபீஸ் எல்லாம் தயாரிப்பாளர்கள் பார்க்க வேண்டிய ஒன்று என்று சொல்லும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி தான் தற்போது 50 கோடி சம்பளத்தை கூலி படத்துக்கு வாங்க வைத்தது என்பதை மறக்கக்கூடாது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
லாஜிக்கை தாண்டி: மக்களுக்குப் பிடித்த பல வெற்றிப் படங்களிலும் இயக்குநர்கள் லாஜிக்கை எல்லாம் மீறி இருப்பார்கள். லாஜிக் மீறல்கள் மட்டுமே கூலி படத்தில் பிரச்சனை இல்லை. அதையெல்லாம் தாண்டி ரசிகர்களை என்டர்டெயின் பண்ண வேண்டிய இடங்களிலும் அவர் கோட்டை விட்டு விட்டார் என்பது தான் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அடுத்த படத்தில் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் இதையெல்லாம் சரி செய்துவிடுவார் என எதிர்பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











