'பத்மாவதி'யை வெளிநாடுகளில் திரையிட தடை கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட் அதிரடி! #PadmavatiConroversy
மும்பை : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவதி' சரித்திரப் படம் பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.
இந்தப் படம் சுமார் 200 கோடி ரூபாயில் தயாராகி உள்ளது. இஸ்லாமிய மன்னர் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளது.
இதில் பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தற்போது வெளியிட முடியாத சூழல் நிலவி வருகிறது.

படத்திற்கு தடை
'பத்மாவதி' படத்தில் மகாராணி பத்மினி பற்றிய தவறான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி ராஜபுத்திரர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.

தடை விதிக்க மறுப்பு
ராஜபுத்திரர்கள் 'பத்மாவதி' படத்தை வெளியிடக்கூடாது என ஏற்கெனவே செய்த மனுவைப் பரிசலீத்த அமர்வு படத்துக்கு தடைவிதிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகுதான் படக்குழுவினர் மீதான பகிரங்க மிரட்டல்கள் தொடங்கின.

பிரிட்டனில் வெளியிடலாம்
இந்நிலையில், பிரிட்டனில் 'பத்மாவதி' படம் சென்சார் சான்றிதழ் பெற்றது. அங்கு படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், படக்குழுவினர் இந்தியாவில் ரிலீஸ் செய்யும்போதுதான் அங்கும் ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தடை?
இதையடுத்து, வெளிநாடுகளிலும் 'பத்மாவதி' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ராஜபுத்திரர்கள் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

விளக்கம் கொடுக்கப்பட்டது
'திரைப்படத்தை நன்கு பரிசீலித்து தணிக்கைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கம் அளித்துள்ளார். இதனால் படத்தை தடைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை' என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











