முப்பாட்டன் முருகன் குறித்த தவறான கருத்து சொன்ன தெலுங்கு இயக்குநர்.. கடுப்பான சீமான் கொந்தளிப்பு
சென்னை: உலகம் முழுவதும் அரசியல் தளத்தில் அதிர்வுகளையும் சர்ச்சைகளையும் உள்ளாக்குவதில் சினிமாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்படி இருக்கையில் இந்திய அரசியலில் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது என்று கூறலாம். இந்நிலையில் இயக்குநர் நாக வம்சி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகவுள்ள படம் திரிவிக்ரம். இந்த படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து படம் குறித்த முதல் அப்டேட்டை படத்தின் இயக்குநர் நாக வம்சி பகிர்ந்திருந்தார். அதில் அவர் தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் குறித்து பதிவிட்ட கருத்துக்கள் பலருக்கும் ஷாக் கொடுத்தது.
அதாவது, முருகன் குறிஞ்சி நிலத் தலைவன், தமிழ் கடவுள், தமிழ் மண்ணின் கடவுள் மட்டுமல்ல தமிழர்களின் கடவுள். அவரை கடந்த காலங்களில் இதிகாச கதைகளை புனைபவர்கள் தங்கள வசதிக்கு ஏற்றவாறு புனைந்து, தமிழ் கடவுள் முருகர் என்ற பதத்தில் இருந்து திரித்து எழுதத் தொடங்கினர். மேலும் முருகரை வழிபட்டு பயன் பெற்ற தமிழரல்லாதோர், தங்களது வசிப்பிடங்களிலும் முருகருக்கு ஆலயங்களை அமைத்துக் கொண்டர் உள்ளிட்ட பல தகவல்களை முருகர் குறித்து பல்வேறு கோணங்களில் வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.
சமீப காலமாக கடவுகளை மையப்படுத்தி ஃபேண்டசியான படங்களை எடுத்தால் அவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறது. இப்படி இருக்கும்போது முருகரின் கதையை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் நாக வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இப்படி இருக்கையில் இந்த படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த நாக வம்சி முருகர் குறித்து மிகவும் பெருமையாக குறிப்பிடுவதாக நினைத்து சில சர்ச்சைக்குரிய தகவல்களை பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைப் பதிவு: அதாவது, வடக்கே பிறந்து, மத்தியில் கடவுளாக உருமாறி, தெற்கே போற்றப்பட்ட ஒரு கடவுளை பிரபஞ்சமே பாராட்டப்படும் அளவுக்கான கதை என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலருமே காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். முருகர் வடக்கே பிறந்தவரா? என்ன ஆதாரம் உள்ளது? முருகர் தமிழ் கடவுள், உங்க வியாபாரத்திற்கு கடவுள் குறித்து தவறான தகவலை கட்டமைக்காதீர் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
சீமான் விமர்சனம்: இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த படத்தின் போஸ்டர் குறித்து மிகவும் காட்டமாக பதில் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். அதாவது, " தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றை திரித்து, தமிழர்களை இழிவு படுத்தினால் கடும் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், 'தமிழர் இறையோன்' முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையென கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications