ஒரு நல்ல படம் கூட தராத விஜய் எப்படி நல்லாட்சி கொடுப்பார்?.. விளாசி விட்ட சீமான்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக நடிகரும் தவெக தலைவருமான விஜய் பொறுப்பேற்றுக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்படி இருக்கையில், அவரது ஆட்சி மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன் வைத்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேனிசை செல்லப்பாவுக்கான புகழ் வணக்கக் கூட்டத்தில் பேசுகையில், முதலமைச்சர் விஜய்யை மிகவும் காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
அதாவது, " மக்கள் விரோதம் என்றால், ஒருவர் இரண்டு தொகுதியில் நிற்பது தான் மக்கள் விரோதம். இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்து, அங்கு இடைத்தேர்தல் நடத்த வைப்பது, ஜன நாயகத்தில் மற்றொருவரின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதே மக்கள் விரோதம் தான். அங்கு இடைத்தேர்தல் நடந்தால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவார்கள், குறைந்தது 20 கோடி ரூபாய் செலவாகும்.

ஒரு காரணம்: சினிமாவில் இருந்து முதலமைச்சர் என்பது மிகவும் எளிதாக உங்களுக்கு அமைந்துவிட்டது. சினிமா கவர்ச்சி இல்லாமல் வேறு எந்த காரணத்தினால் நீங்கள் முதலமைச்சர் ஆனீர்கள்? ஒரு காரணம் சொல்ல முடியுமா? மண்டேலா போல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்து மக்களுக்காக வதை பட்டீர்களா? இல்லை சல்மான் போல தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்காக செலவு செய்கிறீர்களா? ஒரு காரணம் சொல்ல முடியுமா?

ஒரு படமாவது: விஜய் நடித்த 69 படங்களில் ஒரு படம் நல்ல படம் இருக்கிறதா? ஐயா ரஜினிக்கு 50 நல்ல படம் இருக்கு, அண்ணன் கமலுக்கு 100 நல்ல படம், ஐயா எம்.ஜி.ஆருக்கு பெண்களை மதிக்கிற, ஒழுக்கத்தை போதிக்கிற சுமார் 300 நல்ல பாடல்கள் இருக்கு. 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? என்று இந்த மக்கள் நம்பினார்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவரது பேச்சு ஒருமையில் இருந்ததால் அதை பலரும் எதிர்த்து விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில், விஜய்யின் கத்தி, சர்கார், மெர்சல் உள்ளிட்ட படங்களை சீமான் பாராட்டி ஆதரித்தைச் சுட்டிக் காட்டி பலரும், சீமானுக்கு எதிராகவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications