2 தகப்பன்களுக்கு இடையே நடக்கும் சண்டை.. நடுவுல எங்களை இழுத்து விடாதீங்க.. சீமான் கொடுத்த விளக்கம்!
சென்னை: இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில் பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை அந்த விவகாரம் தொடர்பாக முன்வைத்து வருகின்றனர். உயிர் தமிழுக்கு படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பாடலுக்கு மொழி பெரியதா? இசைப் பெரியதா? என்கிற பஞ்சாயத்து தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருப்பதாக வைரமுத்து சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பேசியது பரபரப்பை கிளப்பியது.

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கை அமரன் வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவை ஆளாக்கியது இளையராஜா தான் என்றும் மொழியை விட இசை தான் சிறந்தது என்றும் இளையராஜா பற்றி இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் நடப்பதே வேறு என எச்சரித்து இருந்தார்.
உயிர் தமிழுக்கு: ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கவின் நடித்துள்ள ஸ்டார், சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு போன்ற படங்களுடன் போட்டியாக உயிர் தமிழுக்கு திரைப்படமும் வெளியாகிறது. ஜாபர் சாதிக் தயாரிப்பில் அமீர் நடித்த இறைவன் மிகப்பெரியவன் திரைப்படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராட்டிய சீமான்: அமீர் நடிப்பில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த சீமான் படம் அருமையாக வந்துள்ளது என்றும் நிச்சயம் மக்களுக்கு தேவையான அரசியல் கருத்துக்களை நகைச்சுவையுடன் கூடிய நையாண்டி தனமாக உருவாக்கியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.
இரண்டு தகப்பனுக்கும் இடையே பிரச்சனை: வைரமுத்து மற்றும் இளையராஜா இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில், கல்வியா வீரமா செல்வமா? என மறுபடியும் சரஸ்வதி சபதம் படம் தான் எடுக்க வேண்டும் என்றும் இயல், இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என அப்போதே பாடி விட்டனர். இசையும் மொழியும் சேர்ந்ததுதான் பாடல். அதை மறுக்கவே முடியாது. இது இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சனை. இதற்கு இடையே எங்களை கோர்த்து விடாதீங்க, அவர்கள் இதுதொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இளையராஜா அப்பா கேட்கும் காப்புரிமை கோரிக்கை என்பது நியாயமான ஒன்று, அதை புரியாமல் பலரும் அவரை விமர்சிப்பது தவறான செயல் எனக் கூறியுள்ளார் சீமான். நீட் தேர்வு உள்ளிட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











