ரசிகர்களின் கடும் எதிர்ப்பால் சீனு ராமசாமி ட்வீட் நீக்கம்!
மதுரை : அசோக் குமாரின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டை ரசிகர்களின் கடும் எதிர்ப்பால் தற்போது நீக்கி இருக்கிறார்.
சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டியது தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் அசோக் குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கமே நிற்கிறேன்' என ட்வீட் செய்திருந்தார்.
சீனு ராமசாமியின் ட்வீட் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் சீனு ராமசாமியின் கருத்துக்கு எதிராக ரிப்ளை செய்து வந்தனர். இந்நிலையில், சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பதிந்த ட்வீட்டை நீக்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











