நீர்பறவைக்கு வரிவிலக்கு மறுப்பு: ஜெ அரசைக் கண்டித்து இயக்குநர் சீனு ராமசாமி உண்ணாவிரதம்!

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி, நீர்ப்பறவை என்ற பெயரில் புதிய படம் இயக்கி உள்ளார். இந்தப் படம் மீனவர் அவலத்தைச் சொல்லும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், அனைவரும் பார்க்கத்தக்க படம் என்று யு சான்றளித்துள்ளது.
தமிழில் தலைப்பு வைக்கப்பட்டு, யு சான்று அளிக்கப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு அந்த வரிவிலக்கை தமிழக அரசு அளிக்க மறுத்துவிட்டது.
முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள படம் இது என்பதுதான் பிரதான காரணமாகும். ஏற்கெனவே உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடிக்கும் இதே போல கேளிக்கை வரி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார் சீனு ராமசாமி.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது படத்திற்கு தணிக்கை துறையினர், யூ சர்டிபிகேட்கொடுத்துள்ளனர். ஆனால் எனது படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க மறுக்கிறார்கள். இதை கண்டித்து வருகிற சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அல்லது ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











