சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் மாமனிதன்.. படத்துக்கு கிடைத்தது அடுத்த விருது
நியூயார்க்: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து படக்குழுவுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து கூடல்நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சீனுராமசாமி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என கணிக்கப்பட்டார்.

விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி
இந்தப் படத்துக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார் சீனுராமசாமி. இந்தப் படம்தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக முதல் படம் ஆகும். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால் மேலும் கவனிக்கப்படும் இயக்குநர் ஆனார் சீனு ராமசாமி.

சீனு ராமசாமிக்கென உருவான ரசிகர் பட்டாளம்
தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பிறகு சீனுராமசாமி நீர்ப்பறவை படத்தை இயக்கினார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தன. ஆனால் வசூல் ரீதியாக படம் சரியாக போகவில்லை. இருப்பினும் நீர்ப்பறவைக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சீனு ராமசாமியின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது தர்மதுரை.

ரசிகர்கள் கொண்டாடும் தர்மதுரை
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக சீனுராமசாமி இயக்கிய படங்கள் கொண்டாடப்படாலும் தர்மதுரை படத்தை அனைவரும் கொண்டாடினார்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் ஒதுக்கும் மகன் மீது தாய் வைத்திருக்கும் பாசம், காதலியை இழந்த பிறகு ஒருவன் தத்தளிப்பது என சீனுராமசாமி இயக்கத்தில் பின்னியிருப்பார். இந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் இன்றுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.

சீனுராமசாமியின் மாமனிதனுக்கு குவியும் விருதுகள்
இப்படி வரிசையாக கவனம் ஈர்க்கும் படங்களாக இயக்கிவரும் சீனு ராமசாமி கடைசியாக விஜய் சேதுபதியை மாமனிதன் படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துவருகிறது மாமனிதன். அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 29ஆவது செடோனா சர்வதேச திரைப்பட விழாஇல் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் என்ற விருதினை மாமனிதன் படம் வென்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சர்வதேச அளவில் தொடர்ந்து விருதுகளை குவித்துவரும் மாமனிதனுக்கு திரையுலகம் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துவருகிறது. சீனுராமசாமி தற்போது ஜிவி பிரகாஷ்குமாரை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கிவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











