Seetha: பார்த்திபனுக்கு பிடிக்காதுன்னு அதை பண்ணல... அதுதான் என் தவறு... உண்மையை போட்டுடைத்த சீதா
சென்னை: 1989ம் ஆண்டு வெளியான புதிய பாதை திரைப்படம் முலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்த்திபன்.
இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன் 90களில் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் 2001ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அதன் பின்னணி குறித்து தற்போது சீதா மனம் திறந்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபன் குறித்து மனம் திறந்த சீதா: தமிழில் 1985ம் ஆண்டு வெளியான ஆண் பாவம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சீதா. அதேபோல், புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பார்த்திபன். இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்த சீதா, ரியலாகவும் அவர் மீது காதலில் விழுந்தார். பார்த்திபன் - சீதா இருவருக்கும் காதல் மலர, 1990ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
அதன்பின்னர், இந்த ஜோடிக்கு 2 மகளும் 1 மகனும் பிறந்தனர். ஆனால், பார்த்திபன் - சீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணமான 11 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு சீரியல் நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார் சீதா. இந்த ஜோடியும் செட் ஆகாமல் போக, 2016ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். அதன்பிறகு சீதா தனியாக தான் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலில் பேட்டிக் கொடுத்திருந்த சீதா, பார்த்திபன் குறித்தும் அவரது கேரியர் பற்றியும் மனம் திறந்துள்ளார். அதில், "யாராக இருந்தாலும் அவர்களுக்கென தனியாக ஒரு அடையாளம் வேண்டும், அந்த அடையாளம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விலகிப் போனால் பிறகு அந்த இடத்தை மீண்டும் பிடிப்பது மிகவும் கஷ்டம். அதன்படி, திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தியது தான் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ளார்.
மேலும், பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் நடிப்பதை நிறுத்தினேன். இந்த தவறை தான் செய்திருக்கக் கூடாது என்ற ரீதியில் பேசியுள்ளார் சீதா. பார்த்திபனால் தான் நடிப்பதை நிறுத்தினேன் என்று சீதா கூறியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சீதாவை பிரிந்தது பற்றி சமீபத்தில் பார்த்திபன் பேசியிருந்தார். அதில், சீதா தன்னிடம் அதிகமாக எதிர்பார்த்ததுதான் பிரிவுக்கு காரணமாக அமைந்தது என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், நடிகை சீதாவும் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். அதில், "பார்த்திபன் தான் என்னிடம் முதலில் காதலை சொன்னார். தினமும் தொலைபேசியில் அழைத்து ஐ லவ் யூ சொல்லுமாறு கேட்டுக்கொண்டே இருப்பார். அப்போது என் அப்பா வேறு ஒரு போனில் இருந்து இதை கேட்டுவிட்டார். அதன்பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. மற்றபடி அவர் கூறுவதில் உண்மை இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், "திருமணம் முடிந்த பின்னர் என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால், கணவனிடம் இருந்து முழு அன்பு கிடைக்க வேண்டும் என்பது தான். இதுகூட இல்லை என்றால் வாழ்க்கையில் என்ன தான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். கணவர் எந்த வேலை செய்தாலும் மனைவியை மதித்து, அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மரியாதை கொடுத்து நடந்தால் கணவன், மனைவி எந்த துறையில் வேலை பார்த்தாலும் விவாகரத்து இருக்காது" எனவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











