சாத்தானாக பெரியாரை சித்தரித்தாரா செல்வராகவன்? சர்ச்சையை கிளப்பிய பேட்டி.. மன்னிப்பு கேட்டு ட்வீட்!
சென்னை: செல்வராகவன் படங்கள் என்றாலே ஏகப்பட்ட குறியீடுகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சமீபத்தில் வெளியாகி உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ஹீரோ எஸ்.ஜே. சூர்யாவுக்கு ராமசாமி என செல்வராகவன் வைத்துள்ள பெயருக்குப் பின்னால் இருக்கும் குறியீடு குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ரெஜினாவை கடவுளாக்கி ராமசாமியை சாத்தானாக காட்டியிருப்பது தந்தை பெரியாரை அவமதிக்கும் செயல் என பலரும் பொங்கி எழுந்துள்ளனர்.

5 வருட தாமதம்
கெளதம் மேனன் தயாரிக்க செல்வராகவன் இயக்க எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்கிற அறிவிப்போடு 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் நெஞ்சம் மறப்பதில்லை. 5 வருட தாமதத்திற்கு பிரகு தயாரிப்பாளர் மாற்றப்பட்டு ஏகப்பட்ட நிதி நெருக்கடி பிரச்சனைகளையும் வழக்குகளையும் சமாளித்து இந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

சாத்தான் vs கடவுள்
இந்த படத்தில் ராமசாமி எனும் ராம்சே கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா பெண் பித்துப் பிடித்த சாத்தானாகவும் அவரால் பாதிக்கப்பட்டு இறக்கும் மரியம் பெண் ஜீசஸ் ஆக வந்து பழிவாங்கும் கதை தான் நெஞ்சம் மறப்பதில்லை. மரியம் கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்தன.

சர்ச்சை பேட்டி
இந்நிலையில், நெஞ்சம் மறப்பதில்லை படம் தொடர்பாக செல்வராகவன் கொடுத்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கிளைமேக்ஸில் ஈழம் பிரச்சனையை வைத்திருந்ததாக கூறப்பட்டது. தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ராமசாமி பெயரை திட்டமிட்டே வைத்தீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
ராமசாமி குறியீடு
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கடவுளாக ரெஜினாவின் மரியம் கதாபாத்திரத்தை சித்தரித்துள்ள செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யாவுக்கு ராமசாமி என பெயர் வைத்திருப்பது பெரியாரை குறிப்பிட்டா என்பது போல கேள்வி எழுப்ப, இயக்குநர் செல்வராகவன் லேசாக சிரித்து விட்டு ஆமாம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மன்னிப்பு கேட்ட செல்வராகவன்
தந்தை பெரியாரை இழிவுப்படுத்தும் விதமாக இப்படி சித்தரித்து உள்ள செல்வராகவனுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது, மன்னிப்பு கேட்டு செல்வா ஒரு ட்வீட் போட்டுள்ளார். "நண்பர்களே! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.

விளாசும் நெட்டிசன்கள்
குறீயிடு வைத்து படங்களை இயக்கும் உங்களுக்கு அந்த பேட்டி புரியவில்லை என்பதால் அப்படி சொல்லிவிட்டேன் என்று சமாளிப்பது கேவலமாக இல்லையா? எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஏன் ராமசாமி என பெயரை வைத்தீர்கள். ராமசாமி என்று சொன்னால் பலருக்கும் புரிந்து விடும் என்பதால் தான் ராம்சே என ஸ்டைலாக மாற்றிக் கொண்டீரா என்றும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











