தனுஷ் படத்துக்கு நான் எதுவுமே செய்யல.. பளிச்சென உண்மையை போட்டு உடைத்த செல்வராகவன்!
சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது. அந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். மேலும், அந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் தனது 50வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
வண்டி செட்டப்பில் உள்ள உணவுக்கடை நடத்தும் நபர்கள் கைகளில் ரத்தக்கறை படிந்த ஆயுதங்கள் இருப்பது போல செம டெரராக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டின. தனுஷ் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், இந்த படத்தின் கதை அவருடைய அண்ணன் செல்வராகவன் கதை என தகவல்கள் பரவின. இந்நிலையில், அதற்கு செல்வராகவன் விளக்கம் அளித்து ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார்.

அண்ணன் கதையில் அறிமுகம்: அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அண்ணன் செல்வராகவன் எழுதிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் தனுஷ். அந்த படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் எழுதி இயக்கிய காதல் கொண்டேன் படத்திலும் நடித்திருந்தார் தனுஷ். அதன் பின்னர் தான் கோலிவுட்டில் எமர்ஜிங் நடிகராக மாறிய தனுஷ் திருடா திருடி படம் கமர்ஷியலாக வெற்றி பெற நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.
செல்வராகவன் இயக்கத்தில்: காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி படத்திலும் தனுஷ் நடிக்க வேண்டியது. ஆனால், அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. ஆனால், அதன் பின்னர் புதுப்பேட்டை படத்தில் நடித்தார் தனுஷ். இன்று வரை கல்ட் கேங்ஸ்டர் படமாக புதுப்பேட்டை இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் படங்களிலும் தனுஷை வைத்து இயக்க செல்வராகவன் நினைத்தார். ஆனால், மீண்டும் இருவரும் மயக்கம் என்ன படத்தில் இணைந்தனர். அதன் பின்னர் கடைசியாக வெளியான நானே வருவேன் படத்தில் தனுஷை டபுள் ஆக்ஷனில் நடிக்க வைத்திருந்தார் செல்வராகவன்.
ராயன் கதை: தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த படத்தின் கதை செல்வராகவன் உடையது என்றும் தனுஷ் இயக்க மட்டுமே செய்கிறார் என பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உலாவ ஆரம்பித்தன. இந்த விஷயம் செல்வராகவன் காதுகளுக்கும் எட்டிய நிலையில், தற்போது அது தொடர்பான விளக்கம் ஒன்றை அவர் அளித்திருக்கிறார்.
அது என் கதையல்ல: இயக்குநர் செல்வராகவன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்திற்கு நான் கதை எழுதியதாக சிலர் கூற கேள்விப்பட்டேன். ஆனால், அந்த படத்தின் கதைக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க என் அன்புத் தம்பி தனுஷின் கனவு திரைப்படம். அவரே எழுதி இயக்கி வரும் படம். அந்த படத்தை பார்க்க ரசிகர்களை போல நானும் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கிறேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.
புதுப்பேட்டை 2: சில நாட்களுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பேட்டை 2 உருவாகும் என்றும் அதற்கான கதை பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செல்வராகவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











