புழுங்கி புழுங்கி இருந்தோம்.. தனுஷ் மாதிரிதான் நிறைய பேர் இருக்கிறார்கள்.. செல்வராகவன் ஓபன் டாக்
சென்னை: செல்வராகவன் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர். அவர் இதுவரை எடுத்த பெரும்பாலான படங்கள் கொண்டாடப்படுகின்றன. இடையில் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் இயக்கவிருக்கிறார். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம், மென்டல் மனதில் உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார். கண்டிப்பாக இயக்கத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் அவர் பெரிய வெற்றியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமனார். அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை அவர்தான் எழுதினார். ஆனாலும் அந்தப் படம் கொஞ்சம் அடல்ட் தன்மையோடு உருவாகியிருந்தது. இதன் காரணமாக இயக்குநர் என்ற இடத்தில் கஸ்தூரி ராஜாவின் பெயர் இடம்பெற்றது. முதல் படமே அடல்ட் படம் எடுத்த இயக்குநர் என்ற அடையாளம் தனது மகனுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்த தந்தை தனது பெயரை போட்டுக்கொண்டார். இருந்தாலும் செல்வராகவனுக்கு அந்தப் படம் ஓரளவுக்கு வெளிச்சம் கொடுத்தது. முக்கியமாக யுவனின் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைத்தது.

காதல்கொண்டேன் செல்வா: துள்ளுவதோ இளமை படத்துக்கு பிறகு தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். அதில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். இந்தப் படம்தான் தனுஷுக்கும், செல்வராகவனுக்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. செல்வாவின் மேக்கிங் அவ்வளவு ரியாலிட்டியாகவும், எதார்த்தமாகவும் இருந்ததை பார்த்து கண்டிப்பாக அவர் பெரிய இயக்குநராக வருவார் என்று பலரும் கூறினார்கள். அதேபோல் தனுஷும் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். அந்தப் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன.
நடிப்பில் கவனம் செலுத்தும் செல்வா: இதற்கிடையே சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அந்தத் திருமண முறிவுக்கு பிறகு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமண்ம செய்துகொண்டார். திடீரென அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை இயக்கத்துக்கு ஓய்வு கொடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தினார். அப்படி அவர் சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன், ராயன் என வரிசையாக நடித்தார். இயக்கத்தில் எப்படி யதார்த்தத்தை தூவினாரோ அதேபோல் நடிப்பிலும் தனது திறமையால் முத்திரையை பதித்தார். இருப்பினும் அவர் பழைய பன்னீர்செல்வமாக மீண்டும் இயக்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

நானே வருவேன் செல்வராகவன்: நிலைமை இப்படி இருக்க தனுஷ் கதை எழுதி உருவான நானே வருவேன் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. செல்வராகவனின் டச் இருந்தாலும் பழைய செல்வாவை பார்க்க முடியவில்லை. தற்போது மீண்டும் இயக்கத்தில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம், மென்டல் மனதில் உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தையும் எப்படியாவது இயக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார். அதற்கு கார்த்தியின் கால்ஷீட் கண்டிப்பாக வேண்டுமென்பதால் அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
செல்வராகவனின் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான கோபிநாத் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கு செல்வராகவன் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "தனுஷின் வளர்ச்சியை பார்க்கும்போது ஒரு தனி மனிதனாக பெரிய மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இருக்கிறது. தோற்றங்கள் எப்போதும் ஒருவருக்கு முக்கியமில்லை என்பதும் எனக்கு புரிகிறது. உழைப்பும், திறமையும், கற்பனையும் இருந்தால் ஒவ்வொருவரும் தனுஷ் ஆகலாம் என்பதும் பலருக்கு புலப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். தனுஷ் ஒல்லியாக இருக்கிறார் என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையானவர்கள் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள். அவர் வறுமையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் நான் குண்டாக இருக்கிறேன்.
ரொம்பவே ஒல்லியாகத்தான் இருந்தேன்: காதல் கொண்டேன் படத்தை நான் இயக்கிய சமயத்தில் எல்லாம் ரொம்பவே ஒல்லியாகத்தான் இருந்தேன். கண்ணம்மாபேட்டை, தி.நகரில் இருக்கக்கூடிய ஒரு சாதாரண பையனும் ஹீரோவாகலாம், இயக்குநராகலாம் என்பதை தனுஷ் நிரூபித்திருக்கிறார். ஹீரோவோ, இயக்குநரோ யாருக்காகவோ எழுதி வைக்கப்பட்ட தனி சொத்து கிடையாது. சினிமாவுக்கு வர நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அதாவது நீங்கள் உங்களுடைய தோற்றத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். முதலில் உங்களை நீங்களே நம்ப வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். சினிமாவில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்பதை இத்தனை வருட அனுபவத்தில் புரிந்துகொண்டேன்.

வளர்ச்சிக்கு நான் காரணமா?: தனது வளர்ச்சிக்கு செல்வராகவன்தான் காரணம் என்று தனுஷ் இப்போதும் சொல்கிறார். அதேபோல் வீட்டில் அவர் எப்படி இருப்பார் என்றும் சிலர் கேட்பார்கள். நானும் அவரும் வீட்டில் இருக்கும்போது சினிமா பற்றியெல்லாம் பேசிக்கொள்ளவே மாட்டோம். சாதாரண ஒரு அண்ணன் தம்பி எப்படி இருப்பார்களோ அப்படித்தான் இருப்போம். வாடா, போடா என்றுதான் பேசிக்கொள்வோம். தனுஷ் மட்டுமில்லை என்னுடைய சகோதரிகளுடனும் நான் நெருக்கமாகத்தான் இருப்பேன். அவரது குடும்பங்களோடும் க்ளோஸாகத்தான் இருப்பேன். அதற்கு காரணம் சிறு வயதில் நாங்கள் ஒரே கூட்டில் புழுங்கி புழுங்கித்தான் வளர்ந்தோம், இருந்தோம்.
தனுஷுக்கு கொடுத்தால் இன்பம்தான்: தனுஷுக்கு நான் எதாவது கொடுக்க வேண்டும் என்று சூழ்நிலை வந்தால் என்னுடைய தம்பிக்குத்தானே நான் கொடுக்கிறேன் என்று ஆனந்தம்தான் வரும். நான் மட்டும் அதுமாதிரி இல்லை. என்னுடைய சகோதரிகளும் தனுஷுக்காக கொடுக்க வேண்டும் என்றால் ஆனந்தம் மட்டும்தான் பொங்கி எழும். ஏனெனில் நாங்கள் அப்படித்தான் வளர்ந்தோம். அதுதான் எங்களை இன்னமும் அப்படியே வைத்திருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அட தனுஷ் மீது செல்வராகவனுக்கு எவ்வளவு பாசம் இருக்கிறது. உண்மையில் தனுஷ் கொடுத்து வைத்தவர்தான் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
தனுஷின் திருமண வாழ்க்கை: முன்னதாக காதல் கொண்டேன் ரிலீஸுக்கு பிறகுதான் தனுஷுக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு 15 வருடங்கள்வரை ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார்கள். மேலும் கடந்த வருடம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











