விஸ்வரூபம் படத்தை நான் இயக்கியிருந்தால்.. எனக்கு ஏக்கம்தன்.. செல்வராகவன் ஓபன் டாக்
சென்னை: இயக்குநர் செல்வராகவன் இப்போது நடிகராக பிஸியாக இருக்கிறார். அவர் எவ்வளவுதான் நடித்தாலும் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை. ஏனெனில் அவர் இதுவரை இயக்கிய படங்கள் செய்திருக்கும் சம்பவங்கள் அப்படி. ஒவ்வொரு படமும் ரசிகர்களை ஒன்று கலங்க வைக்கும் இல்லை பிரம்மிக்க வைக்கும். இந்நிலையில் அவர் விஸ்வரூபம் திரைப்படத்தை தன்னால் இயக்க முடியாமல் போனது குறித்து ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
செல்வராகவன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர்களில் ஒருவர். அவர் இதுவரை இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் எல்லாம் பல உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தின. அந்தப் படங்கள் எல்லாம் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகின்றன. ஃபுல் ஃபார்மில் அவர் இருந்தபோது; செல்வாவின் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்க ஆசைப்பட்டார்கள். அந்த அளவுக்கு அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.

விஸ்வரூபம் இயக்க வேண்டியது: அதேபோல் விஸ்வரூபம் படத்தை முதலில் செல்வராகவனைத்தான் இயக்க சொன்னார் கமல். அதற்கு செல்வாவும் ஒத்துக்கொண்டார். ஆனால் செல்வாவின் ஸ்டைலும், கமலின் ஸ்டைலும் ஒரு கட்டத்தில் ஒத்துவரவில்லை. இதன் காரணமாக அந்தப் படத்திலிருந்து வெளியேறினார். பிறகு அப்படத்தை கமல்ஹாசனே இயக்கி நடித்து வெளியிட்டார். பல பிரச்னைகளை கடந்து வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்நிலையில் விஸ்வரூபம் பட வாய்ப்பு நழுவி போனது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் செல்வா.
செல்வராகவன் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு படம் இயக்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறேன் என்றால் விஸ்வரூபம் படம்தான். அது எனக்கு ஏக்கமும் கூட. உண்மையில் அது நல்ல கதை. கெட்டவர்கள், கெட்டவர்கள் என்று பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். நான் எடுத்திருந்தால் அவர்களின் அன்பான பக்கத்தை இன்னும் கொஞ்சம் காண்பித்திருக்கலாம். அந்த நாடு அப்படித்தான் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அங்கே சென்று பார்த்தால் யாரோ ஒரு அம்மா உங்களுக்கு சாப்பாடு போட்டு சாப்பிடு என்று பாசத்துடன் சொல்வார்கள்.
அந்த உலகத்தை நான் வேறு மாதிரி காண்பித்திருக்கலாம். அவர்களது வாழ்க்கையை இன்னும் சூப்பராக காண்பித்திருப்பேன். அவர்களுக்கு மட்டும் புதிய வாழ்க்கையா இருக்கப்போகிறது. எல்லோரையும் வில்லன்களாக நினைத்திருப்போம்; ஆனால் அப்படி இல்லை. நான் இயக்குவதாக இருந்தபோது படத்துக்கு முதலில் கான் என்று பெயர் வைத்தோம். அது மிஸ் ஆனதில் வருத்தம்" என்றார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
நடிகராக செல்வராகவன்: இதற்கிடையே இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் செல்வராகவன் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பீஸ்ட், ராயன், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதேசமயம் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு படங்களின் ஸ்க்ரிப்ட்டையும் அவர் முடித்துவிட்டார். அதனை எப்போது படமாக்குவார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் விரைவில் அந்தப் பணியில் இறங்கி ஓஜி இயக்குநராக கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். விரைவில் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications















