ஆயிரத்தில் ஒருவன் 2 இயக்க வெறித்தனமா இருக்கேன்.. பழைய செல்வராகவன் வந்துட்டாரு.. ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். என்ஜிகே படத்தின் தோல்விக்கு பிறகு நடிப்பின் பக்கம் திரும்பியவர் சிறந்த நடிகராக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு பேசும்படியான கதாப்பாத்திரத்தில் நடித்து பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் வரலாற்று படம் குறித்த அப்டேட்டை செல்வராகவன் தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே போன்ற படங்களை ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடி வருகின்றனர். செல்வராகன் என்ற பெயர் சொல்லும் போதே முதல் காதலின் ஞாபகம் வந்து செல்வது போன்ற உள்ளுணர்வு மனதை போட்டு தாக்கும். தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குநர்களில் இவரது பெயரும் இருக்கிறது. என்ஜிகே படத்தின் தோல்விக்கு பிறகு பீஸ்ட் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகம் ஆனார் செல்வராகவன். இதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார்.

7ஜி ரெயின்போ காலனி 2: சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு தன் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வரும் செல்வராகவன், தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டியில் மிக சுவாரஸ்யமான பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார். இதில், 7ஜி ரெயின்போ காலனி 2 படம் குறித்த அப்டேட்டையும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 50% நிறைவடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அனிதாவின் காதலை மீண்டும் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு பிடித்த அந்த பழைய செல்வராகவனை காண ஆவலோடு இருககின்றனர். இதனிடையே, ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகம் குறித்தும் வெளிப்படையாக செல்வராகவன் கூறியுள்ளார்.
ரசிகர்கள் மன்னிப்பு: ஆயிரத்தில் ஒருவன் படம் திரைக்கு வந்து வெற்றி பெறாமல் போன சமயத்தில் மிகவும் கோபத்தில் இருந்தேன். ஆனால், இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடும் போது தனிமையில் இருப்பது போல் தோன்றுகிறது என செல்வராகவன் தெரிவித்துள்ளார். இப்படத்தை ரீ ரிலீஸ் செய்த போது படத்தை பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளில் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டபோது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களது அன்பு ஒரு பக்கம் ஆறுதலை தந்தாலும் மறுபக்கம் தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவு மனதிற்கு காயத்தை தருகிறது என உருக்கமாக செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது?: நான் பல இடங்களுக்கு வெளியே செல்லும் நேரத்தில் சில ரசிகர்கள் என்னிடம் கேட்பது ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது எடுப்பீர்கள் சார் என கேட்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து நானும் தனுஷூம் தீவிரமாக ஆலோசித்திருக்கிறோம். கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2ஆம் பாகத்தை எடுக்க முடியாது. கண்டிப்பாக முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் அந்த உலகத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காக நடிகர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்கு மற்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காமல் இருக்க வேண்டும். இதற்கு சம்மதம் தெரிவித்து நடிக்க வந்தால் சிறப்பாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க வெறித்தனமா இருக்கேன் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் சார் நாங்களும் உங்களை விட ரொம்ப வெறித்தனமாக காத்திருக்கிறோம். சீக்கிரம் 2ஆம் பாகத்தை எடுங்க என உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











