ஜனநாயகன் படத்துக்கு ப்ரோமோஷன் செய்யும் செங்கோட்டையன்.. எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரே!
சென்னை: விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அரசியலில் விரைவிலேயே காணாமல் போய்விடுவார் விஜய் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கைபடி அவர் தமிழக வெற்றிக் கழகத்தை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். கட்சி ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை சகட்டுமேனிக்கு விளாசிவருகிறார். ஆனால் அதிமுக, பாஜகவை சாந்தமாக அடிப்பதால்; அவர் பாஜகவின் பி டீம்; 2026ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை பிரித்து திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே கட்சி ஆரம்பித்திருப்பதாக திமுகவினர் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
விஜய்க்கு வந்த கரும்புள்ளி: ஆனால் அதையெல்லாம் விஜய் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட சூழலில் 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் தமிழ்நாட்டு மக்களை சந்திக்க அரசியல் சுற்றுப்பயணத்தை செய்துவருகிறார். அப்படி கரூருக்கு சென்றபோது அவரது தாமத வருகை காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் விஜய்யின் அரசியல் பயணத்தில் பெரிய கரும்புள்ளியாக இருக்கிறது.

கட்சியில் சீனியர்கள்: அந்த விவகாரத்தை வைத்து அரசியலுக்கு விஜய் மொத்தமாக அன்ஃபிட் என்று விளாசினார்கள் அவரது எதிர் தரப்பினர். அதுமட்டுமின்றி விஜய்யுடன் அவரது கட்சியில் இருப்பவர்களுக்கு அரசியலில் எதுவுமே தெரியாது; நிச்சயம் அவரை குழியில் தள்ளிவிடுவார்கள் என்றும் குரல்கள் கேட்டன. அப்படிப்பட்ட நிலைமையில் தமிழ்நாட்டின் சீனியர் அரசியல் தலைகளான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தவெகவுக்கு சென்றார்கள். மேலும் பலர் கட்சியில் இணைவார்கள் எனவும் அவர்கள் கூறிவருகிறார்கள்.
ஜனநாயகன் ரிலீஸ்: இதற்கிடையே விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுவதால்; டிக்கெட் விலை எவ்வளவாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் துடித்துவருகிறார்கள். இந்நிலையில் தவெகவில் இணைந்து மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வாங்கியிருக்கும் செங்கோட்டையன் ஜனநாயகன் படத்துக்கு ப்ரோமோஷன் செய்யும் வகையில் பேசியிருக்கிறார்.
ஜனநாயகன் பற்றி செங்கோட்டையன்: அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜனநாயகன் திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது. அதை காப்பதற்கு அந்தப் படம் வரவிருக்கிறது. 2026ஆம் ஆண்டு அவர்தான் தமிழ்நாட்டின் 'நிரந்தர முதலமைச்சர்' என்று வரலாறு படைக்கின்றன் காலம் வரும்" என குறிப்பிட்டார். இதை பார்த்த பலரும், செங்கோட்டையன் எப்படி இருந்த மனுஷன். எம்ஜிஆர் காலத்திலேயே எம்.எல்.ஏ ஆனவர், ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்தவர். இப்போது தவெகவில் இணைந்து விஜய்யின் படத்துக்கு ப்ரோமோஷன் செய்யும் நிலைமைக்கு சென்றுவிட்டாரே; விட்டால் படத்துக்கு போஸ்டரும் ஒட்டுவாரோ என்று வருத்தத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











