இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் அமைப்பதா..? தயாரிப்பாளர்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
சென்னை: பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்க மூத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடிகர் விஷால் தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாரதிராஜா
இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போட்டியாக புதிய சங்கம் உருவாகி இருக்கிறது. இந்தச் சங்கத்துக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், பொதுச்செயலாளராக டி.சிவா, பொருளாளராக தியாகராஜன், இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னாள் தயாரிப்பாளர்
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வேலைகள், ஆரம்பித்ததுமே தயாரிப்பாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி தங்களது வாட்ஸ் அப் குரூப்களில் பேசி வந்தனர். இது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ஆக்டிவாக படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள், முன்னாள் தயாரிப்பாளர்கள் என்ற பிரச்னை எழுந்தது. இதனால் சில தயாரிப்பாளர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர்.

பிரச்னைக்கு தீர்வு
இந்நிலையில்தான் இந்தப் புதிய அமைப்பு உருவாகி உள்ளது. இதுபற்றி இந்த சங்கத்தின் தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, 'கொரோனாவால் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் தயாரிப்பாளர்களின் தேவைகளை நிறைவு செய்யவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் இந்த சங்கம் பாடுபடும். படம் தயாரித்துக்கொண்டு இருப்பவர்களுக்காகவே இந்த சங்கம் உருவாகிறது என்று தெரிவித்தார்.

வேதனையாக இருக்கிறது
இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போட்டியாக இன்னொரு சங்கத்தை உருவாக்க வேண்டாம் என்று பல தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மூத்த தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி உட்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்தா ரவி கூறும்போது, எம்.ஜி.ஆர் ஆலோசனைபடி உருவான சங்கம் இது. சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு செப்டம்பரில் தொடர இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று புதிய சங்கத்தை உருவாக்குவது வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

போட்டி அமைப்பு
இதே கோரிக்கையை மேலும் பல தயாரிப்பாளர்கள் முன் வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் அதிகாரியாக நீதியரசர் ஜெயசந்திரன் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் நடந்துவரும் நிலையில் இந்தப் போட்டி அமைப்பு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில தயாரிப்பாளர்கள் இந்த முடிவுக்கு எதிராக, தமிழக முதலமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











