‘தேசிய தலைவர்' பட விழாவில் பரபரப்பு: நவமணியை அடிக்க பாய்ந்த நடிகர் எஸ்எஸ்ஆர் மகன் கண்ணன்!
சென்னை: மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.
தேசிய தலைவர் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய தலைவர் படத்தின் அறிமுக நிகழ்ச்சியின் மேடையில் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

தேசிய தலைவர்
ஜல்லிக்கட்டு மூவிஸ் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளனர். 'தேசிய தலைவர்' என்ற டைட்டிலில் மிகவும் பிரமாண்டமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் பாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடித்துள்ளார். அரவிந்தராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தேசிய தலைவர் படத்தின் ஆல்பம் வெளியானது. இதனை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பட விழாவில் மோதல்
இந்நிலையில், தேசிய தலைவர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேசிய தலைவர் படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ், நடிகர் ஜெ.எம். பஷீர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். முக்கியமாக முன்னாள் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் நவமணியும், நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகனும் தயாரிப்பாளருமான கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிக்கொண்ட இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மோதலுக்கான காரணம்
தேசிய தலைவர் பட விழாவில் பேசிய தயாரிப்பாளார் கண்ணன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை பார்க்க தனது அப்பா எஸ்.எஸ்.ஆர் சென்றதாகக் கூறினார். மேலும், தனக்கு பெண் மருத்துவர்களும், பெண் செவிலியர்களும் சிகிச்சையளிக்க வேண்டாம் என தனது அப்பாவிடம் முத்துராமலிங்க தேவர் கூறியதாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர் கண்ணன் கூறினார்.

மறுப்பு தெரிவித்த நவமணி
அதன்பின்னர் பேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி, தயாரிப்பாளர் கண்ணன் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார். அதாவது, பெங்களூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவர், தனதுக்கு பெண் மருத்துவர்கள், பெண் செவிலியர்கள் சிகிச்சையளிக்க வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டார். ஆனால், எஸ்.எஸ்.ஆரை கூப்பிட்டு அவர் சொன்னதாக கூறுவது தவறு. அது எஸ்.எஸ்.ஆருக்கு பெருமையாக இருந்தாலும், தேவரை சிறுமைப்படுத்துவதாக அர்த்தமாகிவிடும் எனக் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் கண்ணன், நான் பொய் சொல்லவில்லை என்ற கருத்தோடு, மேடையில் வைத்தே நவமணியை தாக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Click it and Unblock the Notifications











