அம்மா மகா சக்தி... தெய்வத்தை மனிதனால் தண்டிக்க முடியுமா.. உண்ணாவிரத உணர்ச்சிவசம்!
இன்று திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் பலர் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினர்.
மவுன உண்ணாவிரதம் என்று கூறித்தான் இதனை திரையுலகினர் ஆரம்பித்தனர். ஆனால் ஜெயா டிவிக்காரர்கள் விடவில்லை. ஒவ்வொரு நடிகர் நடிகை வரும்போதும், ஓடிப் போய் அவர்கள் முன் மைக்கை நீட்டி, அம்மா தமிழகத்துக்கு செய்த நன்மைகளில் ஆரம்பித்து, இப்போது தண்டனைக்குள்ளானது வரை நீட்டி முழக்கிவிட்டு மைக்கை நீட்டுவார் ஜெயா டிவி செய்தியாளர்.
நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த அளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டுப் போனார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், இந்தத் தீர்ப்பு சதி என்றும் உள்நோக்கம் கொண்டதென்றும் கூறினர்.
வெண்ணிற ஆடை நிர்மலா பேசும்போது, புரட்சித் தலைவி அம்மா இந்த மாநிலத்தின் மகா சக்தி.. இன்னும் புத்துணர்வோடு எழுச்சி பெற்று வருவார் என்றார்.
நடிகர் தேவா பேசும்போது, 'தெய்வத்தை மனிதனால தண்டிக்க முடியுமா... முடியாது சார், முடியாது.. எங்க அம்மா தெய்வம்..' என்று கண்கலங்கினார்.
நடிகை குயிலி பேசும்போது, 'இந்தியாவின் மாபெரும் தலைவர் அம்மா.. அவர் சர்வதேச மக்களையே காப்பாற்றக் கூடிய சக்தி படைத்தைவர்.. அவரைக் கைது செய்யலாமா?' என்றார்.
நடிகரை செந்தில் பேசுகையில், 'எங்க அம்மா.. எங்க அம்மாவை கைது செய்தது மாபெரும் தவறு செய்துவிட்டார்கள்...' என்று கூறி அழுதார்.
மயில்சாமி, சங்கர் கணேஷ், மனோபாலா, சச்சு போன்றவர்கள் கண்கலங்க உணர்ச்சி மயமாக ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications












