Nethran: பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்.. அப்பாவை இழந்த 2 மகள்களும் பரிதவிப்பு
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொடரான பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் நேத்ரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்துவிட்டது.
சினிமா மற்றும் சின்னத்திரை என நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நல்ல மனிதர் தான் நேத்ரன். நடிகை தீபாவை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

நடிகர் நேத்ரனின் மகள்களும் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் நிலையில், சமீபத்தில் தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.
நடிகர் நேத்ரன் காலமானார்: மருதாணி சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நேத்ரன். பாக்கியலட்சுமி சீரியல் வரை ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களில் வில்லனாக நெகட்டிவ் ரோல்களில் நடித்து மிரட்டியவர். ஒரு சில படங்களிலும் துணை நடிகராக நேத்ரன் நடித்துள்ளார். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கதறி அழுத மகள்கள்: அப்பாவுக்கு கேன்சர் நோய் என தெரிந்ததுமே மருத்துவமனையில் சேர்த்து எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என அபிநயா மற்றும் அஞ்சனா என இரு மகள்களும் பல மாதங்களாக தவியாய் தவித்து வந்த நிலையில், அவர்களின் முயற்சி அனைத்துமே வீணாகப் போய்விட்டது. தந்தையின் மரணம் இரு மகள்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

பிரபலங்கள் இரங்கல்: சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலர் நேத்ரன் மறைவுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேத்ரன் இல்லத்துக்கு சென்று மகள்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சின்னத்திரை ரசிகர்களும் நேத்ரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











