“அர்ணவ் திருந்தி வந்தால் ஏத்துக்குறேன்… அவங்க அப்பா, அம்மா சொல்லணும்”: திவ்யாவின் திடீர் கண்டீஷன்
சென்னை: சின்ன திரை நட்சத்திரங்கள் அர்ணவ், திவ்யா காதல் விவகாரம் கடந்த ஒரு வாரமாக வைரலாகி வருகின்றன.
திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு நிலைமை மிக மோசமாகியுள்ளது.
இந்நிலையில், திவ்யா கொடுத்த புகாரின் பேரில் அர்ணவ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீரியலைப் போல் ஆன ரியல் லைஃப்
சின்ன திரை நடிகர் அர்ணவ், நடிகை திவ்யா இருவரது காதல் விவகாரம் தான் கடந்த ஒருவாரமாக ட்ரெண்டிங்கில் உள்ளது. செவ்வந்தி சீரியல் மூலம் அறிமுகமான திவ்யா, தற்போது மகராசி சீரியலிலும் நடித்து வருகிறார். அவரும் விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்துவரும் அர்ணவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அடித்து துன்புறுத்தல்
இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யா சில தினங்களுக்கு முன்பு அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார். மேலும் தனது கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம், என்று கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதுமட்டும் இல்லாமல் தனது கணவர் அர்ணவ் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோ பதிவுகளை வெளியிட்டார் திவ்யா. இந்த வீடியோ பதிவுகள் வைரலாகி வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அர்ணவ் திவ்யா மீது புகார் அளித்தார்.

அர்ணவ் கைது
இந்நிலையில், திவ்யா அளித்த புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 12ம் தேதி சென்னை போரூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அர்ணவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அர்ணவ் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்ணவ்வை, வரும் 28ம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்ணவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திவ்யா கண்டீஷன்
இதனைத் தொடர்ந்து நடிகை திவ்யா தனியார் தொலைக்காட்சிக்கு தற்போது பேட்டியளித்துள்ளார். அதில், "அர்ணவ் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதை அவரின் பெற்றோர் தான் வந்து சொல்ல வேண்டும். ஏனென்றால் பெற்றோர் பெயரை சொல்லி தான் அர்ணவ் என்னை தவிர்த்தார். என்னுடன் வாழ்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது அதுமாதிரி வீட்டிலும் நடந்துகொள்ள வேண்டும். அர்ணவ் வீட்டில் ஒருமாதிரியும் வெளியில் ஒருமாதிரியும் இருக்கிறார். அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. எல்லாம் பொய். தன்னிடம் நேரில் வந்து பேசினால் மட்டுமே இதை பேசித் தீர்க்க முடியும். குழந்தை வேண்டும் என்றால், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேதே வந்து பார்த்திருக்க வேண்டியதானே" எனக் கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பேட்டியும், கண்டிஷனும் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











