சித்ரா மரணம்..2 மாஜி அமைச்சர்களுக்குள்ள தொடர்பால் சிக்க வைத்துள்ளனர்..ஹேம்நாத் தரப்பு மீண்டும் வாதம்
சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை போலீசார், அவரது கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரத்து செய்யக்கூடாது
இந்த வழக்கில் தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.

ஹேம்நாத் சித்ரவதை செய்தார்
அவரது வாதத்தில், மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தப்பட்டது.

வரதட்சணை கேட்கவில்லை
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது தற்கொலை தான் என்றும் தெரிவிக்கபட்டது.

அமைச்சர்களுக்கு தொடர்பு?
மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, அந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும் என்றும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்றும், தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனு தள்ளுபடி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











