வாழ்வை மாற்றிய கொடூர கொரோனா.. காய்கறிகள் விற்கும் சின்னத்திரை இயக்குனர்.. வருத்தமில்லை என்கிறார்!
மும்பை: கொரோனா காரணமாக காய்கறிகள் விற்று வரும் சின்னத்திரை இயக்குனர், இதனால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா, பலர் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டிருக்கிறது.
பலர் வேலை இழந்திருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்கள் சம்பள குறைப்பை சந்திக்கிறார்கள்.

நிலைமை மாற்றம்
பலர் கையிருப்பை கரைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என காத்திருக்கிறார்கள். இருந்ததை செலவழித்துவிட்டு, வாழ்வைப் புதிதாக தொடங்குவது போல, தொடங்கி இருக்கிறார்கள், பலர். நிலைமை சுமூகமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். பலர் இன்னும் போராடி வருகின்றனர்.

டிவி இயக்குனர்கள்
இதற்கிடையே சினிமாவையும் சின்னத்திரை தொடரையும் நம்பி இருந்த சில இயக்குனர்கள், துணை நடிகர்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பலர் தங்கள் தொழிலை மாற்றி உள்ளனர். பல இந்தி நடிகர்கள் காய்கறி விற்று வரும் செய்திகளைப் பார்த்தோம். இப்போது மேலும் ஒரு இயக்குனர் தனது சொந்த ஊரில் காய்கறி விற்று வருகிறார்.

இந்தித் தொடர்
கலர்ஸ் டிவியில், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தித் தொடர், பலிகா வது (Balika Vadhu). ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த தொடர், 2016 ஆம் ஆண்டு வரை, 2245 எபிசோடுகள் ஒளிபரப்பானது. இந்த தொடரை சில இயக்குனர்கள் இயக்கினார்கள். அதில் ஒருவர் ராம் விரிக்ஷா கவுர்.

கொரோனா பரவல்
குச் தோ லோக் கஹேங்கே, சுஜாதா ஆகிய சீரியல்களையும் இயக்கி இருக்கிறார். ரன்தீப் ஹூடா, சுனில் ஷெட்டி, ராஜ்பால் யாதவ் ஆகிய நடிகர்கள் நடித்த பல படங்களிலும் பணியாற்றி உள்ளார் இவர். இவர் அடுத்து சினிமா படத்தை இயக்குவதற்கான வேலையில் இருந்தபோதுதான் கொரோனா பரவல் அதிகமாகி லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

காய்கறி வியாபாரம்
இதனால் சொந்த ஊரான உத்தரபிரதேசத்தில் உள்ள அஸாம்கர் (Azamgarh)-க்கு வந்த அவர், தனது தந்தை செய்யும் காய்கறி வியாபாரத்தை தொடர்கிறார். 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனையும் துணைக்கு வைத்திருக்கிறார். காய்கறிகள் விற்பதால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார் அவர்.

ஆரம்பிக்க இயலாது
அவர் கூறும்போது, 'கொரோனா நேரத்தில் படத்தை ஆரம்பிக்க இயலாது, எப்படியும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிடும் என்றார் தயாரிப்பாளர். அதனால் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். பிழைப்புக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது எனக்கு நன்றாக பழக்கமான வியாபாரத்தை தேர்வு செய்தேன்.
Recommended Video

வருத்தம் இல்லை
தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்த வியாபாரம் எனக்கு அத்துபடியானது. மும்பையில் எனக்கு சொந்த வீடு இருக்கிறது. நிலைமை சரியானதும் நான் அங்கு செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











