திடீரென உயிரிழந்த சேஷு.. பதறியடித்து ஓடிவந்த சந்தானம்.. நள்ளிரவில் குவிந்த லொள்ளு சபா டீம்
சென்னை: விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து இருக்க காரணமே அதன் டீம் தான். சந்தானம், ஜீவா, யோகி பாபு, மாறன் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் அங்கிருந்து தான் சினிமாவுக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் தான் சேஷு.
லொள்ளு சபா சேஷு என்றே அறியப்பட்டு வந்தவர் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பூசாரியாக நடித்து படத்தின் மையக் கதையை நகர்த்தும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க டிராவல் செய்து காமெடி செய்திருப்பார்.

சேஷு திடீரென உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு நடிகர் சந்தானம் நேற்று இரவு அவரது வீட்டுக்குச் சென்று சேஷுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வெண்டிலேட்டர் சிகிச்சை: 10 நாட்களுக்கு முன்னர் தான் அனைத்து லொள்ளு சபா டீமையும் ஒருங்கிணைத்து சேஷு ரீயூனியன் நிகழ்ச்சியை நடத்தினார். 20 வருடங்கள் கழித்து ஒன்றாக லொள்ளு சபா நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், ஒரு சிலர் மட்டும் அதில் பங்கேற்க முடியவில்லை. 25வது வருஷத்தில் விடுபட்ட ஒரு சிலரையும் பங்கேற்க வைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விருப்பப்பட்ட சேஷு இப்போ உயிரோடு இல்லை. ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட சேஷுவுக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது.
சந்தானம் நேரில் அஞ்சலி: லொள்ளு சபா காலத்தில் இருந்து வடக்குப்பட்டி ராமசாமி வரை சேஷுவுக்கு உற்ற துணையாக இருந்து பட வாய்ப்புகளை வழங்கி வந்த சந்தானம் அடுத்ததாக டிடி ரிட்டர்ன்ஸ் 2ம் பாகத்தின் டிஸ்கஷனுக்காக வெளியூரில் இருந்து வந்த நிலையில், சேஷுவின் மரண செய்தி கேட்டு பதறியடித்து நேற்று நள்ளிரவே ஓடி வந்திருக்கிறார்.

அடுத்த படத்திலும் அவருக்கு ரோல்: டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தின் டிஸ்கஷனுக்காக வெளியூரில் இருந்தேன். அவரை பார்க்க வேண்டும் என கிளம்பிக் கொண்டிருந்த போது தான் இப்படியொரு அதிர்ச்சி செய்தி கேள்விப்பட்டு ரொம்பவே ஷாக் ஆகிடுச்சு. அடுத்த படத்திலும் அவருக்கு ரோல் கொடுக்க சொல்லிக் கேட்டிருந்தார். அவருக்கான கதாபாத்திரமும் ரெடியா இருக்கு, ஆனால், அதற்குள் இப்படி எங்களை விட்டுட்டு போவாருன்னு நினைச்சு பார்க்கல என நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
லொள்ளு சபா டீம் அஞ்சலி: சேஷு சமீபத்தில் நடத்திய 20வது வருட ரீ யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மீண்டும் நேற்று நள்ளிரவு பள்ளிக்கரணையில் புதிதாக கட்டிய சேஷுவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர். சேஷு போல ஒரு தங்கமான மனிதரை பார்த்தது இல்லை. ஏகப்பட்ட கடன் இருந்தாலும், கையில் காசு இல்லை என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனம் அவருக்கு நிறைய இருக்கும். தனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என பெரும்பாலும் சினிமா கலைஞர்கள் இருப்பார்கள். ஒரு சின்ன ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும், அவன் ஒரு சீன்ல நடிச்சுட்டு போகணும்னு நினைப்பவர் சேஷு அண்ணா என உருக்கத்துடன் பேசி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications











