எஸ்ஏசி அணிக்கு பின்னடைவு - தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவை கேயார் நடத்த நீதிமன்றம் அனுமதி!

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 28-ந் தேதி சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக இயக்குநர் - தயாரிப்பாளர் கோதண்டராமன் என்ற கேயார் அறிவித்தார்.
இதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், குறிப்பிட்ட இடைவெளியில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் கேயார் தரப்பினர் விதிகளுக்கு முரணாக பொதுக்குழுவை கூட்டுகின்றனர்.
எனவே அவர்கள் பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து கேயார் தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்து சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேயார் வழக்கு தாக்கல் செய்தார். அதில், விதிகளின் அடிப்படையில்தான் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறோம். அதற்கான அறிவிப்புகளை முறைப்படி கொடுத்துள்ளோம். அறிவிப்பை சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சிகள் உள்ளன. எனவே சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்துவிட்டு, எங்களுக்கு பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். சிட்டி சிவில் கோர்ட்டு பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, 28-ந் தேதி மனுதாரருக்கு பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதியின் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், உரிய பாதுகாப்பை சென்னை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும்.
இதன் மூலம் எஸ்ஏ சந்திரசேகரன் அணி பதவி விலகி, தேர்தலைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே எஸ் ஏ சந்திரசேகரனுக்கு எதிராக இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் ஒரு அணி செயல்பட்டு வந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











