வைர வரிகளின் சிற்பி...7 தேசிய விருது பெற்ற வைரமுத்துவின் பிறந்த நாள் ஸ்பெஷல்!
சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரான வைரமுத்து இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
கவிதைகள், நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிப்பெயர்ப்பு, சுயசரிதை என அனைத்திலும் கவித்துவம் நிரம்பியோடும் ஒரு தனித்துவமான நடையையே தனது முத்திரையாக்கிக் கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து.

பாடல், கவிதை எதுவாகட்டும் எதுகை மோனைகளைக் கவனமாகத் தவிர்த்து, எழுவாய் பயனிலைகளை இடம் மாற்றிப் போட்டு உரைநடைக்குள் கவிதையை வசப்படுத்தக்கூடிய மாயமந்திரவாதி.7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவர். இவர் எந்தெந்த பாடலுக்காக தேசிய விருதை பெற்றார் என்று பார்க்கலாம்.
பூங்காற்று திரும்புமா: 1980ல் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேஷன் நடித்த பூங்காற்று திரும்புமா என்ற பாடலுக்காக முதல் தேசிய விருதை கவிப்பேரரசு வைரமுத்து பெற்றார். ஆழமான மனதின் வலியை தனது பாடல் வரியின் மூலம் ரசித்து எழுதி இருப்பார் வைரமுத்து இந்த பாடலை மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.
சின்னச் சின்ன ஆசை: வைரமுத்து - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் முதல் பாட்டு " சின்னச் சின்ன ஆசை". கவிஞரின் 'பொன்மாலைப் பொழுது' எப்படிப் பரபரப்பாகப் பேசப்பட்டதோ, அதுபோலவே 'சின்னச் சின்ன ஆசை பாடலும் பலராலும் பேசப்பட்டு கவிஞருக்கு இரண்டாம் தேசிய விருது பெற்றுத் தந்தது.
போறாளே பொன்னுத்தாயி: இதையடுத்து 1994ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இடம் பெற்ற போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காகவும் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை பாரதி ராஜா இயக்கி இருந்தார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த பாடலை பாடிய சொர்ணலதாவிற்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் இப்பாடல் பெற்றுத்தந்தது.
முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்: அடுத்ததாக சங்கமம் படத்தில் வந்த முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் பாடலுக்கும் வைரமுத்துவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து கூட்டணியே இருந்தது. 90க்கு பிறகு இவர்கள் இருவரும் பல படங்களில் சேர்ந்தே பயணித்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளனர்.
தெய்வம் தந்த பூவே: 2002ம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலுக்காக தெய்வம் தந்த பூவே பாடலுக்காக ஐந்தாவது முறை தேசிய விருதை பெற்றார். உணர்வுப்பூர்வமான இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த பாடலை சின்மயி பாடி இருந்தார்.
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே: விஜய்சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இடம் பெற்ற கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் என்.ஆர். ரகுநாதன் இசையமைத்து இருந்தார். இந்த பாடலில் ஒரு தாயின் பாசத்தை வரிக்கு வரி அழுத்தமாக எழுதி இருப்பார்.
எந்தப் பக்கம்: அடுத்ததாக ஏழாவது முறை சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படத்தில் வரும் எந்தப் பக்கம் பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த பாடலை யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். அதிகமுறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக கவிப்பேரரசு வைரமுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











