இதெல்லாம் எங்க போய் முடியுமோ.. பாலியல் புகார் வழக்கு.. விசாரணைக்கு ஆஜரான பிரபல இயக்குநர்!
மும்பை: பாலியல் புகார் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், பிரபல இயக்குநர் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார்.
பிரயாணம், மிஸ்டர் ராஸ்கல், பட்டேல் கி பஞ்சாபி ஷாதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பாயல் கோஷ்.
பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

பரபரப்பு புகார்
பிளாக் ஃப்ரைடே, மன்மர்ஸியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் பாலியல் புகார் வழக்கு தொடுத்துள்ளார். மும்பை காவல் நிலையத்தில் பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில் அனுராக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணை
மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் இது தொடர்பாக தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆஜர் ஆகி உள்ளார். நடிகை பாயல் கோஷ் தொடுத்த பாலியல் புகார் வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்படுவாரா
தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் ரீதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் அத்துமீறினார் என புகார் அளித்து பாலிவுட்டில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளார் பாயல் கோஷ். கங்கனா ரனவாத்தை தொடர்ந்து கவர்னர் பகத் சிங் கோஷாரியை இவரும் சந்தித்து முறையிட்டுள்ளார். அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாலிவுட் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

ஏற்கனவே பல பிரச்சனைகள்
பாலிவுட்டில் ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணம், போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகைகள் என பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், பாயல் கோஷ் தொடுத்துள்ள பாலியல் புகார் வழக்கும் பாலிவுட்டின் பெயரை டோட்டல் டேமேஜ் செய்து விட்டது.

விசாரணையை மாற்ற வேண்டும்
மேலும், தொடர்ந்து பாலிவுட் மாஃபியாவுக்கு மும்பை போலீசார் சப்போர்ட் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருவதால், நடிகை பாயல் கோஷின் பாலியல் புகார் வழக்கையும் மும்பை போலீசாரிடம் இருந்து மாற்றினால் தான் நியாயம் கிடைக்கும் என்றும் நெட்டிசன்கள் கோஷமிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











