'செக்ஸி துர்கா'வுக்கு வந்த சோகம் - கடைசிவரை திரையிடப்படவில்லை
கோவா : 48-வது சர்வதேசத் திரைப்படத் திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி நிறைவடைந்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இந்தத் திரைப்படத் திருவிழா மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது. உலகின் முக்கிய திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
பலத்த சர்ச்சையில் சிக்கிய 'செக்ஸி துர்கா' திரைப்படம் இந்த விழாவில் கடைசிவரை திரையிடப்படவில்லை.

சர்ச்சையில் சிக்கிய செக்ஸி துர்கா
சணல்குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', 'நியூட்' ஆகிய திரைப்படங்கள் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பட்டியல் செய்தி ஒளிபரப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

படம் திரையிடல் பட்டியலில் இல்லை
ஆனால் இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் 'செக்ஸி துர்கா' மற்றும் 'நியூட்' என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூரி சேர்மன் சுஜாய் கோஷ் மற்றும் இன்னும் இரு ஜூரி உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது திரைப்பட விழாக் குழுவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திரையிட உத்தரவு
'எஸ் துர்கா' என பெயர் மாற்றப்பட்ட 'செக்ஸி துர்கா' படத்தை கோவா திரைப்பட விழாவில் திரையிட உத்தரவிடக்கோரி, அப்படத்தின் இயக்குநர் சணல்குமார் சசிதரன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை கோவா திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என உத்தரவிட்டது.

இன்னும் திரையிடவில்லை
நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, படத்தை திரைப்பட விழா இயக்குநரகத்துக்கு அனுப்பியும், படம் திரையிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக திரைப்பட விழா இயக்குநர் சுனித் டான்டனையும் சந்தித்துப் பேசினார் சணல்குமார்.

எஸ் துர்கா
'செக்ஸி துர்கா' படத்தை தணிக்கை செய்த சென்சார் போர்டு படத்திற்கு 'எஸ்.துர்கா' என பெயரை மாற்றுமாறு பரிந்துரை செய்ததாம். ஆனால், படத்தின் இயக்குநர் அதைக் கடைப்பிடிக்கவில்லையாம். இதைக் காரணம் காட்டி மறு சான்றிதழ் வரும் வரை எங்கும் திரையிடக்கூடாது என உத்தரவிட்டது.

திரையிடவில்லை
இந்த உத்தரவால், நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தும், 'செக்ஸி துர்கா' படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட முடியாமல் போய்விட்டது. இதனால், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











