அரசியல் சிஸ்டமே மாற வேண்டும்.. ஷாருக்கான், தீபிகா, அனுபம் கேர் கருத்து
மும்பை : இந்திய அரசியல் அமைப்பில் மாற்றம் தேவை என இந்தி நடிகர் ஷாருக்கான், அனுபம் கேர் மற்றும் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
16வது லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகின்றது. இந்தநிலையில், எதிர்கால அரசியலில் என்னென்ன நடைமுறைகள் தேவை என்றும், அரசியல் நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தி திரையுலக பிரபலங்கள் சிலர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்தி நடிகர் ஷாரூக்கான், அனுபம் கேர் மற்றும் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் தெரிவித்திருப்பதாவது :-

நடிகர் ஷாருக்கான்...
மகிழ்ச்சிகரமான நாட்டில் வாழத் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். அன்றாடம் வரும் செய்தி தாள்களை படித்தும், தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்த்தும் பொதுமக்கள் தற்போது மிகவும் புத்தி கூர்மை உள்ளவர்களாக மாறிவிட்டனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

நடிகர் அனுபம் கேர்....
பொதுமக்களுக்கு தாங்கள் அளித்த வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. லஞ்சம் போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. அரசியல் அமைப்பில் கட்டாயம் மாற்றம் தேவை. உறுதியான மற்றும் நிலையான அரசு ஆட்சி பொறுப்பேற்க நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.

நடிகை தீபிகா படுகோனே...
அரசியல் அமைப்பில் நிறைய மாற்றங்கள் தேவை. நாம் வாக்களிக்க செல்லும் முன் அரசியல் கட்சியினர் அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் வெற்றி பெற்ற பின் நம்மை மறந்து விடுகின்றனர். இந்த தேர்தலில் அதிக அளவில் இளைஞர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

நிறைய பிரச்சினைகள்....
நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் தேர்தலில் வாக்களித்த பின்னர் தான், அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்' என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











