மாடல்களை ஓட்டல்களில் அடைத்து வைத்து.. பிரபல நடிகையை மிரட்டிய மோசடி கும்பல் பற்றி பகீர் தகவல்கள்!
கொச்சி: பிரபல நடிகையிடம் திருமணம் செய்வதாகப் பழகி, மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற கும்பலைப் பற்றி, பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூர்ணா.
இவர் மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக, கேரளாவின் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார் பூர்ணா.

அழித்து விடுவோம்
இந்நிலையில், அவரது அம்மா ரவ்லா, மராடு போலீஸ் நிலையத்தில் நேற்று திடீரென்று ஒரு புகாரை அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தங்களை அழித்துவிடுவதாகக் கூறுவதாகவும் கூறியிருந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

நன்றாகப் பழகினர்
கடந்த சில நாட்களுக்கு முன் ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு, தான், பூர்ணாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். தனது போட்டோவை அனுப்புகிறேன் என்று கூறி, வேறொருவர் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் நன்றாகப் பழகி உள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர்.

சந்தேகம் அடைந்தனர்
திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துவிட்டு வந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். திடீரென்று அவர்கள் பணம் கேட்டதால் நடிகை பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். பெண் ஒருவரும் மாப்பிள்ளையின் உறவினர் என்று கூறி பேசியுள்ளார்.

4 பேர் கைது
நடிகை தரப்பில் மறுத்ததை அடுத்து, மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். இன்னும் சிலரைத் தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்

கணவன் மனைவி
நடிகை ஒருவரிடம் ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிக்க முயன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தகவல் வெளியானதும் கைது செய்யப்பட்ட கும்பல் மீது மேலும் சிலர் புகார் கூறியுள்ளனர். அதில் ஒருவர் பிரபல மாடல். ஒரு மாடலிங் வேலைக்காக அவர்களை தொடர்பு கொண்ட இந்த கும்பல், கணவன் மனைவி போல மார்வாடி ஒருவர் முன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சொகுசு காரில்
பின்னர் அந்த மார்வாடி கொடுக்கும் சில ஆவணங்களை அந்த கும்பலைச் சேர்ந்தவர் வீட்டில் கொடுக்கும்படி கூறினர். தாங்கள் சொல்வது போல செய்யவில்லை என்றால், சட்ட சிக்கல்களில் மாட்டிவிடுவோம் என்று மாடலை மிரட்டியுள்ளனர். இதுபற்றி அந்த மாடல் கூறும்போது, 'நான் உட்பட மொத்தம் 5 மாடல்களை அவர்கள் சொகுசு காரில் அழைத்துச் சென்றார்கள்.

அடைத்து வைத்தனர்
திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் உள்ள ஓட்டல்களில் அடைத்து வைத்தனர். எங்களிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை பறித்தனர். அதை திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார். நான் 2 சவரன் தங்க சங்கிலியை பறிகொடுத்தேன். மற்றவர்கள் ரூ.4 லட்சம் கொடுத்தார்கள். பிறகு அவர்கள் எங்களைத் தாக்க முயன்றார்கள். தாக்கினால் வெளியே ஓடிவிடுவோம் என்று கூறியதை அடுத்து தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சினிமா
'அந்தக் கும்பல், இந்த மாடல்களை பயன்படுத்தி, தங்கம் கடத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது நடக்கவில்லை. இவர்களுக்குப் பின்னால் சினிமா தொடர்புடைய ஒருவர் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று கேரள போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க சிறப்பு குழுவையும் அவர் அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











