கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி இருக்கும்.. வேள்பாரி என்னுடைய கனவு படம்.. ஷங்கர் அதிரடி
சென்னை: எழுத்தாளரும், எம்.பியுமான சு.வெங்கடேசன் எழுதியிருந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. அதனையொட்டி விகடன் சார்பில் வெற்றிப் பெரு விழா நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், ரோகிணி, உதயசந்திரன் ஐஏஎஸ், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதில் பேசிய ஷங்கர் தான் எடுக்கப்போகும் வேள்பாரி படம் எப்படி இருக்கும் என்று விளக்கியிருக்கிறார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலை சில வருடங்களுக்கு முன்பு எழுதினார். பிரபல வார பத்திரிகையான ஆனந்த விகடனில் அந்த நாவல் தொடராக வந்தது. பாரியின் வாழ்வியல், பரம்பு மலை நிலப்பரப்பு, வீரர்களின் சாகசங்கள் என அத்தனையையும் தனது புனைவோடு சேர்த்து மிகச்சிறப்பாக கொண்டு வந்திருந்தார் வெங்கடேசன். வாசகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வனுக்கு பிறகு: வேள்பாரி நாவலை படித்த அனைவருமே அந்த நாவல் மற்றும் பாரி மன்னருக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள். பொன்னியின் செல்வனுக்கு பிறகு இந்த சரித்திர நாவல்தான் அட்டகாசமாக இருந்தது என்று பலரும் ஓபனாகவே கூறினார்கள். அதுமட்டுமின்றி இதனை படிக்கும்போது ஒரு சினிமாவை பார்ப்பது போன்று இருக்கிறது; இதை படமாக எடுத்தால் சூப்பராக இருக்கும் என்ற ஐடியாவையும் முன்வைத்தார்கள்.

ஷங்கரின் முடிவு: ஷங்கரும் வேள்பாரி நாவலை கொரோனா லாக்டவுன் சமயத்தில் படித்தார். அவரை ஈர்த்ததை அடுத்து இதனை திரைப்படமாக்கும் வேலைகளில் இறங்கி வெங்கடேசனிடமிருந்து உரிமையையும் வாங்கிவிட்டார். எனவே விரைவில் வேள்பாரி நாவல் திரைப்படமாகவிருக்கிறது. இதில் யார் யார் நடிக்கப்போகிறார்கள்; நாவல் மாதிரியே சினிமாவும் சுவாரஸ்யம் குறையாமல் வந்துவிடுமா என்ற எண்ணமும், அக்கறையும் வாசகர்களிடம் எழுந்திருக்கிறது.
வெற்றிப் பெரு விழா: இந்நிலையில் வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதன் காரணமாக; அதனை தொடராக வெளியிட்ட விகடன் வெற்றிப் பெரு விழா நடத்தியது. அதில் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். ஷங்கர் கலந்திருந்ததால் கண்டிப்பாக வேள்பாரி படம் பற்றி ஏதாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி அவர் பேசவும் செய்தார்.
ஷங்கரின் பேச்சு: விழாவில் பேசிய ஷங்கர், "விகடன் நிர்வாக ஆசிரியர் ஸ்ரீனிவாசன் ஒருமுறை என்னிடம் வேள்பாரி நாவல் குறித்து பேசி படிக்க சொன்னார். பிறகு கொரோனா சமயத்தில்தான் அந்தப் புத்தகத்தை படித்தேன். படிக்க படிக்க என்னை ஆச்சரியப்படுத்தியது. விஷுவலாகவும், வெங்கடேசன் எடுத்துக்கொண்ட நிலப்பரப்பாகவும், பாரி மன்னரின் குணாதிசயங்கள் என அத்தனையும் என்னை கவர்ந்தன. ஒவ்வொரு கேர்க்டரையும் அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார்.
படம் அப்படித்தான் இருக்கும்: கபிலரை தூக்கிக்கொண்டு பாரி போவது, மான்கள் இணையும்போது அவைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என தேரில் பாரி வராதது, மாட்டு கொம்பை எரித்து; மாடுகள் எரிந்த பிறகு அதே கொம்புகளை எடுத்து கோவன் தன்னை மாய்த்துக்கொள்வது, தேக்கன் இறந்ததை அறிந்து காட்டில் இருக்கும் பூச்சிகள், தவளைகள் எல்லாம் குரல் எழுப்புவது என அவ்வளவு இடங்கள் அருமையாக இருக்கும். கண்டிப்பாக வேள்பாரி திரைப்படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி இருக்கும். முன்பு எனது கனவுப்படம் எந்திரன். இப்போது வேள்பாரி எனது கனவுப்படம்" என்றார்.


Click it and Unblock the Notifications











