Velpari: அந்த பாலிவுட் ஹீரோ நடிக்கப் போறாரா?.. ஷங்கரின் மாஸ்டர் பிளான்.. தயாரிப்பாளர் கண்டிஷன் இதுதான்!
சென்னை: ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே தனது பிரம்மாண்டத்தின் மூலம் வியக்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். ஜீன்ஸ் படத்தில் 7 அதிசயங்களையும் ஒரே பாடலில் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிசயிக்க வைத்தவர்.
டோலிவுட்டில் ராஜமெளலி உள்ளிட்ட பிரபலங்கள் பிரம்மாண்ட படங்களை எடுப்பதற்கு முன்னதாக பாலிவுட்டுக்கு சவால் விட்டு கான்களையே தனது எந்திரன் படத்தின் மூலம் வியக்க வைத்தார். 2.0 படத்தில் அர்னால்டையே நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால், பட்ஜெட் காரணமாக அக்ஷய் குமார் நடித்தார்.

2.0 திரைப்படம் பெரிய வசூல் அள்ளினாலும், படத்தின் பொருட்செலவு அதிகம் என்பதால் அந்த படத்தில் இருந்தே விமர்சன ரீதியாக அடிவாங்கத் தொடங்கினார் ஷங்கர். மேலும், இந்தியன் 2 திரைப்படம் சுமார் 5 ஆண்டுகள் கால தாமதமாக வெளியான நிலையில், அந்த படமும் ஷங்கருக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.
சாதனையும் சோதனையும்: ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் என செம பீக்கில் பல சாதனைகளை படைத்து வந்த ஷங்கர் விஜய்யை வைத்து நண்பன் படத்தை ரீமேக் செய்த போதே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடி வாங்கினார். தொடர்ந்து, ஐ, 2.0 என ஷங்கரின் சோதனை காலம் தொடங்கிய நிலையில், கடைசியாக வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் டோட்டல் டிசாஸ்டர்களாக மாறி மொத்தமாக முடித்து விட்டது. பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும் போது சரியான திட்டமிடல் ரொம்பவே முக்கியம். சினிமாவுக்கு சின்சியராக இல்லை என்றால் சினிமா நம்மை தூக்கி அடித்து விடும் என ஷங்கர் சொன்னது அவருக்கே கண்ணாடி போல பொருந்தி விட்டது.
வேள்பாரி வந்தால்: ஆனால், டாப் நடிகர்களை போல பிரபல இயக்குநர்களும் ஒரே ஒரு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தால் மீண்டும் அவர்களுடைய சிம்மாசனத்தை அசால்ட்டாக பிடித்து விடுவார்கள். வேள்பாரி படத்தை ரொம்பவே ஷங்கர் நம்பி உள்ளார். அந்த படத்தை அவர் எடுத்து முடித்தால், நிச்சயம் ஷங்கர் ராஜமெளலிக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியான் விக்ரம், ரன்வீர் சிங்: வேள்பாரி படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷங்கர் மீண்டும் தனது அந்நியன், ஐ நடிகரான சியான் விக்ரமையே இந்த படத்துக்கும் தேர்வு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை ரன்வீர் சிங்கை வைத்து எடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவரும் வேள்பாரி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.
தயாரிப்பாளர் போட்ட ஒரே கண்டிஷன்: பாலிவுட்டின் பிரபல நிறுவனமான பென் மீடியா ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துரந்தர் வெற்றிக்குப் பிறகு ரன்வீர் சிங்கை ஷங்கர் இயக்கினால் அதன் எதிர்பார்ப்பு பெரிதளவில் உயர்ந்துவிடும். அதிகபட்சமாக 1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் அதிகரிக்காமலும், ஷூட்டிங் நாட்கள் நீடிக்காமல் இருக்க வேண்டும் என்கிற உறுதியை ஷங்கர் தரப்பு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் கண்டிஷன் போட்டுள்ளதாக பேச்சுக்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் ஷங்கர் இதை மீறியது தான் சிக்கல் ஏற்படக் காரணம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











