Maharaja: மகாராஜா படத்தை பாக்கியராஜால் மிஸ் செய்தாரா சாந்தனு?.. அவரே கொடுத்த விளக்கம்!
சென்னை: நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே சிறந்த படமாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
மகாராஜா படத்தைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து மகாராணி என்கிற படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில், அளித்த பேட்டியில் நித்திலன் சாமிநாதன் விஜய் சேதுபதிக்காக எழுதப்பட்ட கதையல்ல மகாராஜா என்பதை கூறியுள்ளார்.

மேலும், முதன் முதலில் அந்த படத்தில் சாந்தனு தான் நடிக்க வேண்டியது என்றும் அவர் கூறிய நிலையில், அதுதொடர்பாக நடிகர் சாந்தனு தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
100 கோடி வசூல்: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் அரண்மனை 4 படத்தின் வசூலை பீட் செய்து 100 கோடிக்கும் மேல் அதிக வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா மிகப்பெரிய வெற்றி மகுடத்தை விஜய் சேதுபதிக்கு கொடுத்து ஹீரோவாக நடிக்கும் படங்களும் வெற்றி பெறும் என்பதை நிரூபிக்க உதவியது.
ஓல்டு பாயா? அமர்க்களமா?: கொரிய படமான ஓல்டு பாய் படத்தை போலவே மகாராஜா உருவாக்கப்பட்டதாக சிலர் கூறி வரும் நிலையில், இந்த படத்தின் கதையே அஜித் நடித்த அமர்க்களம் படத்தின் கதை தான் என அஜித் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். மகாராஜா படத்தின் ஹைலைட்டே அந்த படத்தின் வித்தியாசமான எடிட்டிங் தான் என்றும் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும், படம் இந்தளவுக்கு வெற்றியை பெற்றிருக்காது என்றும் கூறுகின்றனர்.
ஓடிடியில் சாதனை: திரையரங்குகளில் வசூல் சாதனையை நிகழ்த்திய மகாராஜா நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், உலகம் முழுவதும் அந்த படத்தை ரசிகர்கள் பார்த்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர். லக்ஷ்மி குப்பை தொட்டி பற்றி மீம் போடவே ஹாலிவுட் ரசிகர்கள் ஆரம்பித்தது இந்த படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

சாந்தனு நடிக்க வேண்டியது: இயக்குநராக வேண்டும் என முடிவு செய்த நித்திலன் சாமிநாதன் முதன் முதலில் இந்த படத்தைத் தான் படமாக்க முடிவெடுத்தார். நடிகர் சாந்தனுவை வைத்து மகாராஜா படத்தை எடுக்க நினைத்தாராம். சாந்தனுவுக்கு கதை பிடித்துப் போன நிலையில், படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்த்த இயக்குநருக்கு இந்த படம் உருவாக காலதாமதம் ஆனதால், குரங்கு பொம்மை படக்கதையை எழுதி முதலில் அந்த படத்தை இயக்கிவிட்டு, அதன் பின்னர் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா படத்தை இயக்கியுள்ளார்.
சாந்தனு ட்வீட்: இதுதொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நித்திலன் கூறிய நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு, ”மகாராஜா படத்திற்கு உயிர் கொடுத்த நித்திலனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், சரியான கதையை நான் தேர்வு செய்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால், இந்த படத்தை நான் மிஸ் செய்ய எங்கப்பா பாக்கியராஜ் அல்லது நானோ பொறுப்பல்ல. தயாரிப்பாளர்கள் அப்போது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நித்திலன் இந்த கதை சொன்னதே என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. ஆனால், இப்போ கன்டென்ட் தான் கிங் என்பதை அனைவரும் புரிந்துக் கொண்டனர் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











