கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த.. பிரபல நடிகையின் தந்தை மரணம்!
சென்னை: உடல் நலப் பிரச்னை காரணமாக, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை சாந்தி கிருஷ்ணாவின் தந்தை நேற்று உயிரிழந்தார்.
நடிகை சாந்தி கிருஷ்ணா, சிவப்பு மல்லி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்தப் படத்தை ராம நாராயணன் இயக்கி இருந்தார். விஜயகாந்த், சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

பன்னீர் புஷ்பங்கள்
இதையடுத்து பிரதாப் நடித்த, பன்னீர் புஷ்பங்கள், விசுவின் மணல் கயிறு, கமல்ஹாசனின் சிம்லா ஸ்பெஷல், விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தார். மலையாள நடிகர் ஶ்ரீநாத்தை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

அண்ணாமலை
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1995 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். சாந்தி கிருஷ்ணாவின் சகோதரர்தான், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் கமலின் சத்யா, ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, அண்ணாமலை உள்பட பல படங்களை இயக்கியவர். நடிகை சாந்தி கிருஷ்ணாவின் தந்தை ஆர். கிருஷ்ணா.

சிறுநீரகப் பிரச்னை
இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவருக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கு
அவருக்கு வயது 92. கோவிட்-19 வழிகாட்டுதல்படி அவர் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இதையடுத்து திரையுலக பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் நடிகை சாந்தி கிருஷ்ணாவுக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











