சாந்தி திரையரங்கு விற்பனை வழக்கு..பிரபுவின் சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி!
சென்னை : சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எங்கள் தந்தை நடிகர் சிவாஜி கணேசன் சுயமாக சம்பாதித்த ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை எங்கள் சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் முறையாக பராமரிக்கவில்லை.
பல சொத்துகளை விற்பனை செய்து எங்களை ஏமாற்றி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தந்தை சம்பாதித்த சொத்து
ஆயிரம் பவுன் தங்க நகைகள், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டர் பங்குகளையும் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டனர். எனவே, எங்கள் தந்தை சம்பாத்தியம் செய்த சொத்துகளை அவர்கள் விற்பனை செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். சொத்தில் எங்களுக்கு பங்கு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இடைக்காலத்தடை
இந்த வழக்கில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சம பங்கு உண்டு
இந்த வழக்கில் இன்று இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்கு சமபங்கு உள்ளதாகவும், சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் பிரதான வழக்கை விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பான சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கு தள்ளுபடி
நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது. கூடுதல் மனுக்கள் மீது வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











