ராஜேஸ்கண்ணாவை விட சில வாரங்கள் நான் மூத்தவள்: ஷர்மிளா தாகூர்

காகா என்று அன்போடு அழைக்கப்படும் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஸ்கண்ணா புதன்கிழமையன்று மரணமடைந்துவிட்டார். அவரது இழப்பிற்காக இந்தியத்திரையுலகமும், ரசிகர்களும் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.
அவருடன் நடித்த நடிகர், நடிகையர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் டுவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆராதனா படத்தில் ராஜேஸ்கண்ணா உடன் ஜோடியாக நடித்த ஷர்மிளா தாகூர் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் காகாவை ( ராஜேஸ் கண்ணா) சந்திக்க நேரிட்டது. அதிகம் எடை போட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அவருடைய முகத்தில் நிழலிட்டிருந்த சோகமே காட்டிக்கொடுத்துவிட்டது. இருப்பினும் என்னுடன் மென்மையாய் பேசினார். ஆராதனா திரைப்படத்தில் அவருடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தேன். எங்களை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது அந்த படம். என்னுடைய மேக் அறைக்கே வந்து சில ஐடியாக்களை பகிர்ந்து கொண்டார். இது யாருக்குமே கிடைக்காத பாக்கியம்.
நானும் காகாவும் திரையுலகில் வெற்றிகரமான ஜோடிகள். ஆராதனா, அமர் பிரேம் ஆகிய திரைப்படங்களே இதற்கு சாட்சியாக இருந்திருக்கின்றன. அந்த திரைப்படத்தை மீண்டும் மும்பையில் பார்க்க நேரிட்டபோது இதை நான் உணர்ந்தேன்.
காகா வும் நானும் ஒரே வருடத்தில் அதுவும் டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்கிறோம். அவரைவிட சிலவாரங்கள் நான் மூத்தவள் என்று கூறி ராஜேஸ் கண்ணாவுடனான தன் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார் ஷர்மிளா தாகூர்.


Click it and Unblock the Notifications











