ஷின் சான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தி ஸ்பைசி கசுகாபே டான்சர்ஸ் இன் இந்தியா ரிலீஸ் ஆகிடுச்சு!
சென்னை: இந்திய அனிமேஷன் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வாரம் பெரும் விருந்தாக அமையப்போகிறது. பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஷின் சான்: தி ஸ்பைசி காசுகபே டான்சர்ஸ் இன் இந்தியா" திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே டீமன் ஸ்லேயர் அனிமேஷன் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், காலாண்டு விடுமுறையை குழந்தைகளுடன் தியேட்டரில் ஷின் சான் படத்தை பார்த்து கொண்டாடலாம். இதுவரை வீட்டில் டிவியில் ஷின் சானை பார்த்து ரசித்த குழந்தைகளுக்கு பெரிய திரையில் ஷின் சானையும் அவரது நண்பர்கள் செய்யும் சேட்டையையும் காண அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இத்திரைப்படம், ஷின் சான் மற்றும் காசுகபே காவலர் குழுவின் நான்கு உறுப்பினர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. ஹகஷிமிர் நகரில் நடைபெற்ற காசுகபே குழந்தைகள் பொழுதுபோக்கு விழாவில் இவர்கள் இணைந்து பங்கேற்கின்றனர்.

காசுகபே நகரம் இந்திய நகரமான முஷிபாயுடன் ஒருங்கிணையும் இந்த விழாவில், நடனப் போட்டியில் வெல்லும் குழுவிற்கு இந்தியா சென்று மேடையில் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும். ஷின் சான் குழு வெற்றி பெற்ற நிலையில், அவர்களின் இந்தியப் பயணம் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஆரம்பமாகிறது.
மசகாசு ஹாஷிமோட்டோ இயக்கிய இந்தத் திரைப்படம், ஷின் சான் மற்றும் காசுகபே காவலர் குழுவின் மர்மமான உறுப்பினர் போ சான் இடையேயான நட்பை ஆழமாக ஆராய்கிறது.
கதையின்படி, ஷின் சான் மற்றும் போ சான் இந்தியாவில் ஒரு சாகசப் பயணத்தில் இருக்கும்போது ஒரு வினோதமான ஜெனரல் ஸ்டோரைக் கண்டறிகின்றனர். அங்கு ஒரு "மூக்கு" போன்ற வடிவத்தில் உள்ள ஒரு விசித்திரமான பையைக் காண்கிறார்கள்.
அதன் வினோதமான வடிவத்தால் ஈர்க்கப்பட்ட ஷின் சான் அதை வாங்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த பையில் மறைந்திருக்கும் ஆபத்தைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. போ சான் அந்த பையில் இருந்து கிடைத்த ஒரு துண்டு காகிதத்தில் தனது மூக்கைப் போடும்போது, ஒரு தீய சக்தி வெளிப்பட்டு அவனைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த இருள் சக்தியின் பிடியில் சிக்கிய போ சான், உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் சக்தி கொண்ட ஒரு பயங்கரமான கொடுங்கோலனாக மாறுகிறான். போ சானை இந்த ஆபத்தில் இருந்து ஷின் சானும் அவனது நண்பர்களும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான பகுதி.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் அனைவரையும் கவர்ந்தாலும், இந்தியாவும் அதன் செழுமையான கலாச்சாரமும் முதல் முறையாக ஷின் சான் உலகத்தின் ஒரு பகுதியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில், அற்புதமான அனிமேஷனுடன் ஒரு பிரமாண்டமான அளவில் உருவாக்கப்பட்ட முதல் நடனப் பொழுதுபோக்குத் திரைப்படம் இதுவாகும்.
"ஷின் சான்: தி ஸ்பைசி காசுகபே டான்சர்ஸ் இன் இந்தியா" குறித்து இயக்குநர் மசகாசு ஹாஷிமோட்டோ கூறுகையில், "இப்படத் தயாரிப்பிற்காக, நான் திரைக்கதை மற்றும் கலைக் குழுவினருடன் இந்தியாவுக்குச் சென்று படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்தேன். அங்கு மிகக் காரமான கறி மற்றும் சுட்டெரிக்கும் வெயிலை அனுபவித்தோம்."
"பாடல், நடனம், சிரிப்பு, அழுகை, உணவு, தொலைந்து போதல், மனச்சோர்வு... இவை அனைத்தும் நிறைந்த, ஷின் சானின் உணர்வுகளுக்கு மிகவும் உண்மையான, இது போன்ற ஒரு புதுமையான பொழுதுபோக்குத் திரைப்படத்தை எங்களால் வழங்க முடியும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
"ஷின் சான்: தி ஸ்பைசி காசுகபே டான்சர்ஸ் இன் இந்தியா" திரைப்படம் தற்போது திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து இந்த அழகான திரைப்படத்தை கண்டு மகிழுங்கள். டிக்கெட் முன்பதிவுக்கு: bookmy.show/ShinchanTSKDI
பதிப்புரிமை: ©USUI YOSHITO/FUTABASHA,SHIN-EI,TV ASAHI,ADK 2025


Click it and Unblock the Notifications











