வெள்ளித்திரையில் ஹீரோ; நிஜத்தில் வில்லன்! - ஷாரூக்குக்கு சிவசேனா கண்டனம்

மும்பையில் கடந்த 13-ந் தேதி தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த அதிர்ச்சியை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இந்த நிலையில் நடிகை கேத்ரினா கைப்பின் 27-வது பிறந்தநாளையொட்டியும், அவரது படம் 'ஜிந்தகி மிலேக்கி நா டோபரா' வெளியாகியிருப்பதை முன்னிட்டும், நடிகர் ஷாருக்கான் அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடம்பர விருந்து ஒன்று அளித்துள்ளார்.
இந்த விருந்தில் கேத்ரினா கைப்புடன் இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், அர்ஜுன் ராம்பால், கரண் ஜோஹர், நடிகை கரிஷ்மா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
விருந்தில் கலந்துகொண்டவர்களுக்காக 'ஜிந்தகி மிலேக்கி நா டோபரா' படம் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
இந்த விவரமெல்லாம், பர்ஹான் அக்தர் மூலம் தெரிய வந்தது. அவர் இந்த விருந்துக்காக ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
நிஜ வில்லன் ஷாரூக்
இந்த விருந்து தொடர்பாக சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து 'சாம்னா' பத்திரிகையில் கூறி இருப்பதாவது:
மும்பை குண்டுவெடிப்புகளை தொடர்ந்து பல பிரபலங்கள் தங்கள் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனர். குரு பூர்ணிமா கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டனர். குண்டுவெடிப்பு நாளில் பிரான்ஸ் நாட்டு அரசு அளித்த விருதைக்கூட நடிகை ஐஸ்வர்யாராய் ஏற்க மறுத்து விட்டார்.
ஆனால் ஷாருக்கானுக்கு அந்த விருந்தினை ரத்து செய்யும் உணர்வு இல்லை. வெள்ளித்திரையில் அவர் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு வில்லன்," என்று குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











