கமல்ஹாசனின் கன்னடம் பற்றிய கருத்து.. அதற்கு கை தட்டினேனா?.. சிவராஜ்குமார் கொடுத்த விளக்கம்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. பான் இந்திய படமாக உருவாக்கியிருக்கும் அதற்கு கர்நாடக மாநிலத்தில் சிக்கல் எழுந்திருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னடம் மொழி பற்றி கமல் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் தங்கள் மாநிலத்தில் படத்தை ரிலீஸ் செய்யவிடமாட்டோம் என்று கர்நாடகாவிலிருந்து குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
மணிரத்னமும், கமலும் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தபோதே தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருந்தது. ஏனெனில் அவர்கள் சேர்ந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த முறையும் இக்கூட்டணி கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் எனும் நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகமாக இருப்பதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பெரிய கூட்டணி: இதில் கமல்ஹாசனுடன் சிம்புவும் முதன்முறையாக இணைந்திருக்கிறார். முதலில் தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்கும் படத்தை கமல்தான் தயாரிப்பதாக இருந்தார். அப்போதிருந்தே அவருக்கும் சிம்புவுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும்; அதன் அடிப்படையில் சிம்புவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க கமல் முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சிம்பு தவிர திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்திருக்கிறார்கள்.
பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பாடல்களுமே ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் லூப் மோடில் போய்க்கொண்டிருக்கிறது. படமானது ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அப்படத்துக்கு சிக்கல் ஒன்றும் எழ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ட்விஸ்ட்?: அதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழ் மொழியிலிருந்துதான் கன்னட மொழி பிறந்தது' என்று கூறினார். அவரது அந்தப் பேச்சுக்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தொடங்கி; பல கன்னட அமைப்பினர்களும் கமலுக்கு கண்டனத்தை பதிவு செய்தார்கள். மேலும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

எழுந்த ஆதரவு: அதேசமயம் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிவராஜ்குமார், நடிகை திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் கமலுக்கு தங்களது ஆதரவை கொடுத்தார்கள். மேலும் அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது எனவும் கமல் கூறிவிட்டார். சூழல் இப்படி இருக்க அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடவிட மாட்டோம் என்று கூறி படத்தை தடை செய்திருக்கிறார்கள். அதனையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.
சிவராஜ்குமார் கருத்து: சூழல் இப்படி இருக்க கமலுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து பேசிய சிவராஜ்குமார், "அனைத்து மொழிகளுமே முக்கியம்தான். ஆனால் தாய்மொழி விஷயத்தில் கன்னடத்துக்குத்தான் நான் முன்னுரிமை கொடுப்பேன். மேலும் கன்னட மொழிக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கமலை மன்னிப்பு கேளுங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. நான் அந்த நிகழ்ச்சியில் கை தட்டினேன்தான். ஆனால் கன்னட மொழி பற்றிய அவர் பேசியபோது கை தட்டவில்லை. வேறு ஒரு விஷயத்துக்காகத்தான் நான் கை தட்டினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











