Shiva Rajkumar: சின்ன வயசுல இருந்தே.. தம்பி புனித் ராஜ்குமார் குறித்து.. மனம் திறந்த சிவ ராஜ்குமார்!
சென்னை: கன்னட நடிகர் சிவராஜ்குமார் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் தான். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்த பின்னர் அவருக்கு வரவேற்பு என்பது முன்பு இருந்ததை விடவும் கூடிவிட்டது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படமான 45 படத்தின் புரோமோசன் விழாவில் கலந்து கொண்ட சிவ ராஜ்குமார் தனது தம்பி சிவ ராஜ்குமார் குறித்தும் தனது குடும்பம் குறித்தும் பேசினார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகிறது. 45 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிவ ராஜ்குமார் உடன், உபேந்திரா, ராஜ்.பி. ஷெட்டி, ஜிஷு சென்குப்தா மற்றும் கௌஸ்துப மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படக்குழு சார்பில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சிவ ராஜ்குமார் தனது கடந்த காலங்கள் குறித்து சிலாகித்து பேசினார்.
அதாவது, " சென்னையில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். எப்போது சென்னைக்கு வந்தாலும் எனது இடத்திற்கு வந்து விட்டேன் என்கிற உணர்வு எனக்கு வரும். புதுக்கல்லூரியில் தான் நான் படித்தேன். ஒருமுறை கல்லூரிக்கு போகாமல், தேவி தியேட்டரில் படம் பார்க்கும்போது தான் ஒரு இயக்குநர் என்னைப் பார்த்து சினிமாவில் நடிக்க வருகிறீர்களா எனக் கேட்டார். அங்கிருந்துதான் எனது சினிமா பயணம் தொடங்கியது. நான் நடிகர் ராஜ்குமாரின் மகன் எனக் கூறிய பின்னர், அந்த இயக்குநர் வீட்டிற்கே வந்து பேசினார்.

புனித்: அதற்கு எனது அப்பா, எனது மகனுக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அப்படி ஒரு ஆசை இருந்தால், அவரை நான் கன்னடத்திலேயே அறிமுகம் செய்வேன் எனக் கூறி அனுப்பிவிட்டார். அப்போது எனது தம்பி புனித் நடித்துக் கொண்டிருந்தார். அவர் சின்ன வயதில் இருந்தே ஹீரோ. அதன் பின்னர்தான் நான் நடிக்க ஆரம்பித்தேன். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் சினிமாவிற்குள் வந்து 40 ஆண்டுகள் ஆகப்போகிறது. இத்தனை ஆண்டுகளாகவும் வெற்றியையும் தோல்வியையும் நான் தலையில் ஏற்றிக் கொண்டது இல்லை. ஆனால் நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன்.
சோகங்கள்: நீங்களும் நான் சந்திப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். 19 ஆண்டுகளுக்கு முன்னர் எனது அப்பா தவறிவிட்டார். அதன் பின்னர் எனது சித்தப்பா மறைந்தார். அதன் பின்னர் எனது அம்மா தவறிவிட்டார்கள். அதன் பின்னர் எனது தம்பி புனித் ராஜ்குமார் மறைந்தார். இதற்கிடையில் எனக்கு தலையில் ஒரு ஆப்ரேஷன், பாரீஸில் உள்ள மருத்துவமனையில் செய்யப்பட்டது.

புற்று நோய்: எனது மகளின் திருமணம் முடிந்து ஒரு மாத கால இடைவெளியில் இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தோள்பட்டையில் ஆபரேஷன் செய்ய வேண்டியது இருந்தது. கடந்த ஆண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காகவும் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால் வாழ்க்கையில் சோகத்தையும் துயரத்தையும் அதிகம் பார்த்துவிட்டேன். ஆனால் எப்போதும் மக்கள் எனக்கு அன்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் கிளைமேக்ஸ் போர்ஷனை எடுக்கும்போது நான் புற்றுநோய்க்கு கீமோ தெரபி செய்து கொண்டு இருந்தேன் " இவ்வாறு அவர் பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











